புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வந்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மீண்டும் உங்களுடன் பயணம் செய்யப்போதவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1988ஆம் ஆண்டு சலாம் பாம்பே திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் இர்ஃபான் கான், ஜுராசிக் வேர்ல்ட், தி ஜங்கிள் புக், லைஃப் ஆஃப் பை ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இர்ஃபான் கான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் திரையுலகினரும் அவரது ரசிகர்களும், குடும்பத்தாரும் அவரோடு சேர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதைத் தொடர்ந்து இந்த புது வகை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற இர்ஃபான் கான் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மீண்டும் திரும்பி வருவேனா என்று தெரியாது.. உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்… எனக்காக பிராத்தனை செய்யுங்கள் என உருக்கமாக பதிவிட்டிருந்தார்
இந்த நோய் பற்றிய ஆய்வு குறைவாகவே நடைபெற்றுள்ள நிலையில் லண்டனில் தீவிர சிகிச்சை மேற்கொண்டுவந்தார். சுமார் பத்து மாதங்களாக சிகிச்சை பெற்ற அவர் தற்போது நோயை வென்று மீண்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் நலம்பெறத் துணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்ஃபான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எங்கோ வெற்றி பெறுவதில் நாம் நேசிக்கப்படுவதை மறந்து விடுகிறோம். சோதனை காலங்களில் இது நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது.
எனது பாதத் தடங்களை இந்த வாழ்க்கையில் விட்டுச் செல்வதற்கு முன் உங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதுவே என்னை குணமடையத் தூண்டியது. நான் மீண்டும் உங்களுடன் பயணம் செய்ய இருக்கிறேன். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.