
மும்பைப் பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிவு காணப்பட்ட நிலையில் இன்று காளையின் நடமாட்டம் இருந்து, சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்தன.
இதனால், உலோகம், நிதி, ஆட்டோமொபைல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டதால் பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்தது.
சர்வதேச சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பெடரல் வங்கியின்வட்டி வீத அதிகரிப்பு முடிவு ஆகிய காரணங்களால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை.இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 2 ஆயிரம் புள்ளிகள் சரிந்தன, ஏறக்குறைய ரூ.7 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்குஇழப்பு ஏற்பட்டது
இந்நிலையில் மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சாதகமான போக்கு காணப்பட்டது. வர்த்தகம் இடையே சென்செக்ஸ் புள்ளிகள் அதிகபட்சமாக 57,926 வரையிலும், குறைந்தபட்சமாக 57,059 வரையிலும் இறங்கின. வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து, 57,808 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிப்டியில் 53 புள்ளிகள் உயர்ந்து 17,267 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ்இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ட்வின்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன், மாருதி சுஸூகி, ஆக்சிஸ் வங்கி, சன் ஃபார்மா, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன.
மேலும், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், பவர் கிரிட், எஸ்பிஐ லைப், லார்சன் அன்ட் டூப்ரோ, டிசிஎஸ், டாடா கன்சூமர் ப்ராடக்ட்ஸ், கோடக் வங்கி, ஹெச்டிஎப்சி, அல்ட்ரா டெக், ஸ்ரீசிமென்ட், எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் அதிகமாக வாங்கப்பட்டன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.