
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருமா, அந்த விலை உயர்விலிருந்து நம்மதியை மக்கள் எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது
லிட்டருக்கு ரூ.10 உயர்வு
5 மாநிலத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல்வ விலை உயர்த்துவது நிறுத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 21ம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. ஏறக்குறைய லிட்டருக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
பணவீக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவதால், மார்ச் மாதத்துக்கான சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் இருப்பதையும் கடந்து 6.95% உயர்ந்துவிட்டது. இந்த உயர்வு கடந்த 17 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.
அதுமட்டுமல்லாமல் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசுகையில் “ உக்ரைனுடன் அமைதிப் பேச்சு என்பது முடிவுக்கு வந்துவிட்டது”எனத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக, பொருட்களின் சப்ளை தடைபட்டுள்ளது, விலையும் அதிகரித்துள்ளது.
கைவிரிப்பு
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்ட நிலையில் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்து சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் கூறுகையில் “ கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலருக்கு அதிகமாக செல்லும்பட்சத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும், மக்களும்தான் விலைவாசி உயர்வு சுமையைச் சமாளிக்க வேண்டியதிருக்கும்” எனத் தெரிவித்தார்
கச்சா எண்ணெய் விலை
பிரன்ட் கச்சா எண்ணெய் தற்போது பேரல் 106 டாலராகவும் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் பேரல் 128 டாலராக இருந்து தற்போது குறைந்துள்ளது. ஆனால் இனிவரும் மாதங்களில் பேரல் 110 டாலருக்கு மேல் உயர்வதற்கு வாய்ப்பில்லை 100டாலருக்குள்ளாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மீது ரூ.5 , டீசல் மீது லிட்டருக்கு ரூ.10 உற்பத்தி வரியைக் குறைத்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலை உயரும்
ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் வரும்நாட்களில் தீவிரமடைந்தால், மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரும், அதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும்.
நாட்டில் பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்ந்த நிலையிலும், பெருந்தொற்றிலிருந்து பொருளாதாரம் மீள வேண்டும் என்பற்காக வட்டி வீதத்தை 4 % அளவிலேயே ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இதன் காரணமாகவே பணவீக்கம் அதிகரித்து, விலைவாசியும் உயர்ந்துவருகிறது. பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்தால், நீண்டகாலத்தில் பணவீக்கம் குறைந்து, விலைவாசியும் குறையும். வரும் ஜூன் மாதத்தில் நடக்கும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி வீதம் உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.