
அடிக்கடி பெட்ரோல் நிலையத்தில் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி கார், பைக் போன்ற வாகனங்களின் பெட்ரோல், டீசல் நிரப்பி வருகிறீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தச் செய்தி. இப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல்-டீசல் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் இனி கேஸ் பேக் ஆஃபர் கிடைக்காது.
2019 அக்டோபர் 1 ம் தேதி முதல், எண்ணெய் நிறுவனங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு வழங்கி வந்த தள்ளுபடியை நிறுத்த உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோல் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத கேஷ்பேக் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி இரவு பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இந்த வசதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், கிரெடிட் கார்டு மூலம் பரிவரத்தணையின் போது 0.75 சதவீத கேஷ்பேக் வசதி அக்டோபர் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பியிருந்தாலும், அனைத்து வங்கிகளின் சார்பிலும் இந்த வசதி நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.