
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பங்குச்சந்தையும் ஏற்றஇறக்கத்துடன் இருப்பதால், எல்ஐசி பங்கு விற்பனையை இந்த மாதத்தில் நடத்தலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு நாளை(4-ம்தேதி) கூடி விவாதிக்க உள்ளனர்.
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. வரும் மார்ச் 11ம்தேதி எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை இருக்கலாம்.
இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன.
இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதற்கான கடைசித் தேதியும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக இந்திய விமானப்படையை களமிறக்கி, மாணவர்களை மீட்க உள்ளது.
உள்நாட்டளவில் எந்தவிதமான பதற்றமும் இல்லாவிட்டாலும், சர்வதேச சூழல், காரணிகள் எல்ஐசி பங்குவிற்பனைக்கு சாதகமாக இல்லை. அன்னிடநேரடி முதலீட்டாளர்களும் ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் 20சதவீதம்வரை வாங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டநிலையில் சர்வதேச சூழலால் அவர்கள் பங்கு விற்பனையில் பங்கேற்பார்களா எனத் தெரியவில்லை. அவ்வாறு பங்கேற்றாலும் ஐபிஓ மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்குமா, எதிர்பார்த்த தொகை கிடைக்குமா என்ற கேள்விகள் எழுகிறது.
இதையடுத்து, எல்ஐசி ஐபிஓவை இந்த மாதத்தில் நடத்தலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு நாளை டெல்லியில் கூடி விவாதித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆனால், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ மத்தியஅரசு எல்ஐசி ஐபிஓவை நடப்பு நிதியாண்டுக்குள் நடத்த நினைத்தாலும், சர்வதேச சூழல், பங்குச்சந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கமான சூழல் சாதகமானதாகஇல்லை. இந்த சூழல்களுக்கு மத்தியில் பங்கு விற்பனையை நடத்தினாலும் அதனால் பெரிய தொகை கிடைக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆதலால், எல்ஐசி பங்கு விற்பனை அடுத்த நிதியாண்டுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது” எனத் தெரிவித்தனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.