Gold rate Today: உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை: சவரண் ரூ.41ஆயிரத்தை நெருங்குகிறது: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Mar 9, 2022, 12:20 PM IST
Highlights

Gold rate Today:ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக சவரண் ரூ.40ஆயிரதத்துக்கும்  மேல் அதிகரித்தநிலையில், புதிய உச்சமாக ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக சவரண் ரூ.40ஆயிரதத்துக்கும்  மேல் அதிகரித்தநிலையில், புதிய உச்சமாக ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர,உயர தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்ய அச்சப்படும் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்துக்கு பாதுகாப்பான இடம் தேவை என்பதால், தங்கத்தின் மீது முதலீட்டை திருப்பும்போது தங்கத்தின் விலை இயல்பாக அதிகரிக்கும்.

உச்சத்தை நோக்கி தங்கம்

அந்த வகையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40ஆயிரத்துக்கும் மேல் சென்றுள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரண் ரூ.40,840க்கு விற்பனையாகிறது. ஏறக்குறைய ரூ.41ஆயிரத்தை நெருங்கிவிட்டது

சர்வதேச சந்தை

ஆனால், சர்வதேச காமாடிட்டி சந்தையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்குப்பின் தங்கம் விலை ரூ.55ஆயிரத்தை எட்டியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் பதற்றம் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் கவனத்தை திருப்பியதே காரணம். 

10 கிராம் தங்கத்தின் எடை 1.64 சதவீதம் உயர்ந்து, ரூ.55,111 என்று விலையில் இன்று இருக்கிறது. வெள்ளி விலையும் 2.19 சதவீதம் உயர்ந்து, கிலோ ரூ.72,950 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நேற்று ஒருஅவுன்ஸ் தங்கம் 2,069 டாலர்களாக இருந்தநிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவு 2,072 டாலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் இந்த விலை உயர்வை எட்டியுள்ளது.

ஏன் இந்த விலை உயர்வு

அமெரிக்கத் தடை

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா பிரிட்டன் நாடுகள் பொருளாதாரத் தடையை ரஷ்யாவுக்கு விதித்திருந்தன. ஆனால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முழுமையாக அமெரிக்கா தடைவிதிக்காமல் இருந்து வந்தது. ஆனால், அதிபர் பிடன் நேற்று பிறப்பித்த உத்தரவில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு தடை விதித்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் தேவையை 70 சதவீதம் ரஷ்யாதான் நிறைவு செய்கிறது. அந்நாட்டிலிருந்துதான் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், தற்போது ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் கடுமையாக உயரும். வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை பேரல் 200 டாலருக்கு வந்தாலும் வியப்பில்லை என ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன

இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வைத் தூண்டியது. கச்சா எண்ணெயை அடிப்படையாக கொண்டே அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் இயங்கி வருகிறது. ஆனால், அதில் நிலையற்ற சூழல் இருக்கும்போது, நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க தங்கத்தின் மீது முதலீட்டை திருப்புகிறார்கள். இதனால் தங்கத்தின் தேவை சர்வதேச சந்தையில் அதிகரித்து விலை உயரக் காரணமாகிறது.

வட்டிவீதம் 

இது தவிர அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக்கூட்டம் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறுகிறது இந்தக் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என சில ஆய்வு நிறுவங்கள் தெரிவித்தாலும், சில நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் வட்டிவீதம் உயராது என்று கூறுகின்றன. இந்த ஊசலாட்டாத்தாலும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது பார்வையைச் செலுத்தியதால், விலை உயர்ந்து வருகிறது.

click me!