
அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சோப்பு, பிஸ்கட், தேநீர், சமையல் எண்ணெய், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களை உள்ளடக்கிய எஃப்எம்சிஜி துறையில் மீண்டும் விலை உயர்வு பற்றிய பேச்சு தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாமாயில், பொதியிடும் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயுடன் தொடர்புடைய செலவுகள் நிறுவனங்களின் லாப வரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் சில நிறுவனங்கள் விலையை உயர்த்துவதுடன், சில பொருட்களின் அளவைக் குறைக்கும் முறையையும் பயன்படுத்தி வருகின்றன. வரும் செப்டம்பர் காலாண்டில் மேலும் விலை மாற்றங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பல பொருட்களின் விலை சுமார் 2% முதல் 5% வரை உயர்த்தப்பட்டது.
தற்போது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் மூலப்பொருட்களின் செலவு தொடர்ந்து அதிகமாக உள்ளது, படிப்படியாக மேலும் விலை உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சோப்பு, தனிநபர் பராமரிப்பு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் இதே நிலை காணப்படுகிறது. பிரிட்டானியா நிறுவனம் வரும் காலாண்டில் மேலும் சுமார் 1.5% முதல் 2% வரை விலை உயர்த்தும் திட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக சர்க்கரை, பாமாயில் மற்றும் தொழில்துறை எரிபொருள் செலவுகள் அதிகரிப்பதால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய அளவு பொதிகளின் விலையை நேரடியாக உயர்த்துவதற்குப் பதிலாக, அதே விலையில் பொருளின் அளவைக் குறைக்கும் முறையும் சில நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடையில் விலை மாறவில்லை என்றாலும், நுகர்வோருக்கு கிடைக்கும் பொருளின் அளவு குறையலாம். இதற்கிடையே, அனைத்து எஃப்எம்சிஜி பொருட்களின் விலையும் ஒரே நேரத்தில் 5% உயரும் என்று கூற முடியாது.
நிறுவனங்கள் தங்களின் மூலப்பொருள் செலவு மற்றும் லாப நிலையைப் பொறுத்து ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அளவில் விலை மாற்றத்தை மேற்கொள்ளலாம். ஏற்கனவே சில நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அதிகரித்த செலவுகளை முழுமையாக நுகர்வோரிடம் மாற்றாமல், விலை உயர்வு மற்றும் பொருளின் அளவு குறைப்பு ஆகியவற்றை இணைத்து பயன்படுத்துகின்றன.
எனவே குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை எவ்வளவு உயரும் என்பது அந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த முடிவுப் பொறுத்தே இருக்கும். இதன் தாக்கம் சாமானிய மக்களின் மாதாந்திர மளிகைச் செலவிலும் தெரியக்கூடும். குறிப்பாக வீட்டில் தொடர்ந்து வாங்கப்படும் சோப்பு, பிஸ்கட், தேநீர், சவர்க்காரம், எண்ணெய் போன்ற பல பொருட்களில் சிறிய அளவிலான விலை உயர்வுகள் கூட மாத இறுதியில் மொத்த செலவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பற்றியவை மட்டுமே. ஒவ்வொரு பொருளின் இறுதி விலையும் நிறுவனம் மற்றும் சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறும். எனவே செப்டம்பர் மாத பொருட்களின் விலை நிலவரத்தைப் பார்த்த பிறகே மொத்த தாக்கத்தைத் தெளிவாகக் கூற முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.