
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ரிசர்வ் வங்கி 2022, டிசம்பர் மாதம் வரை ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தும். வட்டிவீதம் 5.90 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என பிட்ச்(Fitch) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடன்தர ரேட்டிங் நிறுவனமான பிட்ச், “உலகப் பொருளாதார கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா மோசமான வெளிப்புறச் சூழலால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கமாடிட்டி பொருட்கள் விலை உயர்வு, உலகளவில் நிதிக்கொள்கை கட்டுப்பாடுகளால் வட்டிவீதம் உயர்வு,பணவீக்கத்தைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன
பணவீக்கத்தை குறைக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்த்தும் நடவடிக்கை 2022 டிசம்பர் வரை நீடிக்கும். வட்டிவீதம் 5.90 சதவீதம் வரை அதிகரிக்கும். 2023ம் ஆண்டு இறுதியில் வட்டிவீதம் 6.15 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் ஆனால், இது மாறுதலுக்கு உட்பட்டது.
கடந்த மே மாதம் சில்லரைப் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணவீக்க உயர்வு மக்களுக்கு பெரும் சவாலாக உருவெடுத்து, காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்கள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்கள் பணவீக்கம்சராசரியாக 7.3சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் மருத்துவத்துக்காக செலவிடும் தொகையும் அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்ததால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதத்தில் நுகர்வு அதிகரித்து அதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். 2022 ஜனவரி –மார்ச் காலாண்டில் ஜிடிபி 4.1 சதவீதம் வளர்ச்சிஅடைந்தது. ஆனால், நாங்கள் 4.8சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என கணத்திருந்தோம்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று நாங்கள் முன்பு கணித்திருந்தோம். அதை 7.8 சதவீதமாகக் குறைத்துள்ளோம்.
இந்தியாவின் கடன் வாங்கும் ரேட்டிங் அளவு மைனஸ் என்ற நிலையிலிருந்து நிலையானது என்ற நிலைக்கு நகர்ந்துள்ளது. வேகமான பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சிக்குறைவுக்கான சாத்தியங்கள் குறைந்தது போன்றவற்றால் இந்தியாவின் ரேட்டிங் நிலை BBB என்ற நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது.
இவ்வாறு பிட்ச் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.