
டிசம்பர் மாதம் முடிவுக்கு வருவதால், புத்தாண்டுக்கு முன் சில முக்கியமான தொடர்புடைய நிதிகளை கட்டாயமாக முடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. டிசம்பர் 31 என்பது பல விஷயங்களுக்கு கடைசி தேதி. இந்த தேதியை தவறவிட்டால் அபராதம், கூடுதல் வட்டி, தேவையற்ற சட்ட சிக்கல்கள் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதனால், இப்போது கவனமாக செயல்படுவது நல்லது.
டிசம்பர் 31 கடைசி தேதி
2025ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று டிசம்பர் 19 என்பதால், வருட முடிவிற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த காலக்கட்டத்தில் சில முக்கிய நிதிகளை முடிக்காமல் விட்டால், நேரடியாக உங்கள் பணப்பையை அது பாதிக்கும். குறிப்பாக வருமானவரி தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டுவது பெரிய சிக்கல்களை உருவாக்கலாம்.
வருமானவரி அறிக்கை தாக்கல்
2024–25 நிதியாண்டுக்கான வருமானவரி அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், டிசம்பர் 31, 2025க்குள் அவசியமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேதிக்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்ய முடியாது. தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.
ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால் என்ன பிரச்சனை?
டிசம்பர் 31க்குள் தாமத ஐடிஆர் கூட தாக்கல் செய்யவில்லை என்றால், உங்கள் வருமானவரி ரீஃபண்ட் கிடைக்காமல் போகலாம் அல்லது தாமதமாகும். அதோடு, வருமானவரி சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படலாம். இதனால், உங்களின் மொத்த வரி சுமை அதிகரிக்கும்.
எதிர்கால திட்டங்களிலும் பாதிப்பு
வருமானவரி அறிக்கையை தொடர்ந்து தாக்கல் செய்யாமல் இருப்பது, உங்கள் டாக்ஸ் புரொஃபைலை பலவீனப்படுத்தும். இதனால் வங்கி கடன், ஹோம் லோன், கிரெடிட் கார்டு, விசா விண்ணப்பம் போன்றவற்றில் சிக்கல்கள் உள்ளன. மேலும், வருமானவரி துறை கண்காணிப்பு அதிகரித்து, நோட்டீஸ் வரும் வாய்ப்பு அதிகம்.
ஆதார் – பான் இணைப்பு
2024 அக்டோபர் 1க்கு முன் ஆதார் பெற்றவர்கள், இன்று பான்-ஐ ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், டிசம்பர் 31, 2025க்குள் அவசியமாக இணைக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் பான் செயலிழக்கும். இதனால் வங்கி பரிவர்த்தனை, முதலீடு, ஐடிஆர் தாக்கல் போன்ற பல விஷயங்கள் பாதிக்கப்படும்.
பான்–ஆதார் இணைப்பது எளிது
வருமான வரி மின்-தாக்கல் இணையதளத்தில் பான் எண், ஆதார் எண் மற்றும் மொபைலுக்கு வரும் OTP மூலம் சில நிமிடங்களில் இணைக்கலாம். அபராதம் இருந்தால் அதையும் ஆன்லைனில் செலுத்தலாம். SMS மூலமாகவும் இந்த பணியை முடிக்க முடியும். இன்னும் சில நாட்களே இருந்தால், இந்த முக்கிய பணிகளை தாமதிக்காமல் இன்றே முடித்துவிடுவது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.