crisis in sri lanka : இலங்கையின் நிதிஅமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்பு

By Pothy RajFirst Published May 25, 2022, 2:25 PM IST
Highlights

crisis in sri lanka : கடும் நிதி நெருக்கடி, பொருளதாரச் சிக்கலில் தவிக்கும் இலங்கை அரசின் நிதி அமைச்சர் பொறுப்பையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்றுக்கொண்டு இன்று முறைப்படி பதவி ஏற்றார்.

கடும் நிதி நெருக்கடி, பொருளதாரச் சிக்கலில் தவிக்கும் இலங்கை அரசின் நிதி அமைச்சர் பொறுப்பையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்றுக்கொண்டு இன்று முறைப்படி பதவி ஏற்றார்.

இலங்கை அரசு சார்பில் சர்வதேச நிதியத்திடம் கேட்கப்பட்டுள்ள கடன் தொகை, உலக வங்கியிடம் கோரப்பட்டுள்ள நிதியுதவி அனைத்துக்கும் விக்ரமசிங்கே தலைமையிலான குழு கவனிக்கும்.

6-வது முறை 

இலங்கையின் பிரதமராக இதற்கு முன் 5 முறை இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் நிலவும் உள்நாட்டுக் குழப்பம், அரசின் பொருளாதாரச்சூழல் மோசமடைந்து திவாலான சூழல், மக்களின் போராட்டம், கடும் பொருளாதாரச் சிக்கல் ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் மிகந்தா ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். 

இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். பிரதமராக பதவி ஏற்றபின் விக்ரமசிங்கை புதிய அமைச்சரவையை அமைத்தாலும், நிதிஅமைச்சர் பொறுப்புக்கு சரியான, வலுவான நபர் கிடைக்கவில்லை. 

நிதி அமைச்சர் பொறுப்பு

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிதிநெருக்கடி, பொருளதாரச் சிக்கல், மக்களின் போராட்டம், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு ஆகியவற்றை சமாளிக்கவும் வெளிநாடுகளிடம் நிதியுதவி கோரல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படவும் தானே நிதிஅமைச்சர் பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கை ஏற்றுள்ளார்.

இது தொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் “ இலங்கையின் நிதி, பொருளாதார நிலைத்தன்மை,மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக பிரதமர் விக்ரமசிங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ இன்னும் 6 வாரங்களில் இலங்கையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். உள்கட்டமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டு, அதில் சேர்க்கப்பட்டுள்ள நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு மக்களின் நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1948ம் ஆண்டுக்குப்பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துவருகிறது. விலைவாசி விண்ணை முட்டும்வகையில் உயர்ந்துவிட்டதால், மக்கள் சாலையில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.

இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை, வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. 

இலங்கையில் ஆளும் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து போராடினர். இதில் மக்களின் போராட்டத்தின் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்காமல் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளார்.
 

click me!