ஊரைவிட்டு ஓடி வந்த அண்ணாச்சி... ஊரெல்லாம் சரவணா ஸ்டோர் உருவாச்சி... சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி..?

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2021, 3:37 PM IST
Highlights

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தனது உறவினர் பார்க்கச் சொன்ன சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரம் நாடாரைத் தேடிச் சென்றார். 

இன்று இந்தியாவின் நம்பர் ரீடெய்லர்ஸ் நிறுவனமாக சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறது சரவணா ஸ்டோர்ஸ் குழும நிறுவனங்கள். 

இந்த நிறுவனம் உருவானது எப்படி..? அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்திலும், இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது பணிக்கர் குடியிருப்பு என்ற அந்தக் கிராமம். இங்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். அங்கு வசித்துவந்த செல்வரத்தினம் மற்றும் அவரது சகோதரர்கள் விவசாயம் பார்த்து வந்தனர். அத்துடன், ஓர் அரிசி ஆலையையும் நடத்தி வந்தனர்.

அப்போதுதான், செல்வரத்தினத்துக்கு ஒரு புதிய யோசனை தோன்றி இருக்கிறது.  சென்னைக்குச் சென்று மளிகைக் கடை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காகத் தன்னுடைய சேமிப்பை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார் செல்வரத்தினம். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தனது உறவினர் பார்க்கச் சொன்ன சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரம் நாடாரைத் தேடிச் சென்றார். அவரிடம், 'நான் ஒரு மளிகைக் கடை (இப்போதைய சரவணா ஸ்டோர்ஸ்) வைக்கலாம்னு  இருக்கேன். அதுக்கு நீங்க உதவி பண்ணணும்' என்று கேட்டார். 

அதற்கு சோமசுந்தரம், "மளிகைக் கடை வைத்தால் அது இந்தப் பகுதியில் இப்போதைக்கு எடுபடாது. எல்லோரும் கொத்தவால் சாவடி போய் அங்குதான் மளிகைப் பொருள்கள் வாங்குகிறார்கள். ரங்கநாதன் தெருவில் கும்பகோணம் பாத்திரக்கடை இருக்கிறது. அதை நடத்துகிறவர், கடை மற்றும் கட்டடத்தை அப்படியே விலைக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார். நீங்கள் வேண்டுமானால், அதை வாங்கிப் பாத்திர வியாபாரம் செய்யுங்கள். நன்றாகப் போகும்" என்று அறிவுறுத்தினார்.

சோமசுந்தரத்தின் யோசனைப்படி கும்பகோணம் பாத்திரக் கடையைக் கட்டடத்தோடு சேர்த்து தனபாலிடமிருந்து செல்வரத்தினம் விலைக்கு வாங்கினார். இந்தப் பாத்திரக் கடைதான் இன்றைக்கு சரவணா ஸ்டோர்ஸ் ஆக உருவாகி இருக்கிறது. வியாபாரம் சூடு பிடிக்கவே ஊரில் இருந்த தனது இரு சகோதரர்களையும் சென்னைக்கு அழைத்து வந்தார் செல்வ ரத்தினம். விற்பனைக் கடைகளின் சங்கிலித்தொடராக பல கிளைக் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனமானது சரவணா ஸ்டோர்ஸ். 

இது இந்தியாவின் ஒரு வட்டாரத்தில் முதல் இடத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையமாகி நிற்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 அன்று சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. இது சிறிதுசிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998 இல் உருவானது.

சரணா ஸ்டோர்ஸ் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலையில் என ஏழு கடைகள் இயக்குகிறது. இந்நிறுவனமானது மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் மிகப்பெரிய கடைகளைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனமானது மும்பை, தில்லி மற்றும் பெங்களூரில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. 

இந்நிறுவனம் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் சரவணா செல்வரத்தினம் கடைகளையும் நடத்தி வருகிறது. 2004 ஆம் ஆண்டில், சரவாணா ஸ்டோர்ஸ் குழுமம் ஜமாய் என்ற புதிய ஐஸ்கிரீம் பிராண்டை அறிமுகப்படுத்தியது. இது சென்னையில் தயாரிக்கப்பட்ட 100% பால் சார்ந்த ஐஸ்கிரீம் பிராண்டாகும், இது தமிழ்நாடு முழுவதும் விற்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 10000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சுமார் 30000 லிட்டர் என விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போது இந்த நிறுவனம் சரவணா செல்வரத்தினத்தின் உறவினர்கள் 5 பேர்களால் தனித்தனியாக நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. 

click me!