
இம்மாதம் 27ம் தேதி முதல் கட்டுப்பாடில்லா சர்வதேச விமானச் சேவையைத் தொடங்க மத்தியஅரசு அறிவித்துள்ளதால், அதன்பின், விமானப் பயணக் கட்டம் 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடையில்லா விமான சேவை
மார்ச் 27ம் தேதிக்குப்பின் விமானங்கள்அதிகமான அளவில் இயக்கப்படும்போது, கட்டணம் குறைக்கப்படும். இந்தக் கட்டணம் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டணம் உயர்வு
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவுக்குள் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான பயோ-பபுள் முறைப்படி மட்டும்தான் விமானப் போக்குவரத்து நடந்தது. உலக நாடுகளுக்கு குறைவான விமானம் மட்டுமே இயக்கப்பட்டதால், விமானக் கட்டணமும் 100 சதவீதம் உயர்ந்திருந்தது.
27ம் தேதி
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டதைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி முதல் தடையில்லா சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கட்டணம் குறையலாம்
இதன் மூலம் கொரோனா காலத்துக்கு முன் இயக்கப்பட்டது போன்று அதி்கமான விமானங்கள் இயக்கப்படும். இதனால் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இயல்பாகவே கட்டணம் குறையும் அந்தவகையில் 40 சதவீதம் வரை கட்டணம் குறையலாம் எனத் தெரிகிறது.
லூப்தான்ஸா, ஸ்விடர்சர்லாந்து ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மார்ச் 27ம் தேதிக்குப்பின் தங்கள் விமானங்கள்எண்ணிக்கையை 17% உயர்த்தப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உள்நாட்டு நிறுவனமான இன்டிகோ நிறுவனம் தனது தினசரி விமானங்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. விமான எரிபொருள் கட்டணம் இந்த ஆண்டில் 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது. விமானங்கள் அதிகமாக இயக்கப்படும் சூழலில் எரிபொருள் விலையை குறைத்தால் டிக்கெட் கட்டணம் வெகுவாகக் குறையக்கூடும்.
வரவேற்பு
எக்ஸிகோ டிராவல் போர்ட்டல் நிறுவனத்தின் சிஇஓ அலோக் வாஜ்பாய் கூறுகையில் “ கொரோனா காலத்தில் விமானத் தேவைக்கும், சப்ளைக்கும் சமனற்ற போக்கு இருந்தது. இதனால், பயணிகள் 100 சதவீத கட்டண உயர்வை அனுபவித்தார்கள். ஆனால், விமானங்கள் அதிகமான அளவு இயக்கப்பட்டு, கொரோனாவுக்கு முந்தையக் காலத்தைப்போல் வந்துவிட்டால், கட்டணம் குறையக்கூடும்” எனத் தெரிவித்தார்.
கட்டணம் மாறாது
மேக் மை ட்ரிப் தளத்தின் நிர்வாக அதிகாரி ராஜேஷ் மாகோவ் கூறுகையில் “ விமானங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லவிஷயம் என்றாலும், கட்டணம் குறையுமா என்பது தெரியாது. விமான எரிபொருள் விலையை குறைக்கவில்லையே. பயணிகளுக்கு அதிகமான அளவு விமானங்கள் கிடைக்கும். ஆனால், கட்டணக் குறைப்பு இருக்குமா எனத் தெரியாது. ஒருவேளை உக்ரைன் ரஷ்யா பிரச்சினை மேலும் மோசமானால் எரிபொருள் விலை மேலும்உயரக்கூடும்” எனத் தெரிவித்தார்
எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் 8 நகரங்களில் இருந்து சிங்கப்பூர் விமானம் வாரத்துக்கு 52 விமானங்களை இயக்குகிறது. வரும் 21ம் தேதிக்குப்பின் 61 விமானங்களை இயக்க இருக்கிறது. சென்னை உள்பட 8 நகரங்களில் மீண்டும் நேரடி விமானச் சேவையைத் தொடங்கஇருக்கிறது
லூப்தான்ஸா ஏர்லைன்ஸ் வாரத்துக்கு 22 விமானங்கள்இயக்கிய நிலையில் அக்டோபர் மாதத்துக்குள் 42 விமானங்கள் இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.