பட்ஜெட்ல வேலைவாய்ப்பு எங்கே? விலைவாசியை குறைக்க என்ன நடவடிக்கை? எதிர்க்கட்சித் தலைவர்கள் பாய்ச்சல்

By manimegalai aFirst Published Feb 1, 2022, 7:04 PM IST
Highlights

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அம்சங்கள் இருக்கிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அம்சங்கள் இருக்கிறதா, விலைவாசி உயர்வுைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 4-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். புதிதாக ஒரு ரூபாய் கூட வரிவிதிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தாலும், நடுத்தரப் குடும்பத்தினர்,ஊதியம் வாங்கும் பிரிவினருக்கு வருமானவரி செலுத்துவதில் எந்தச் சலுகையும் தொடர்ந்து 7-வது ஆண்டாகவும் இல்லை. இதனால் வருமானவரி உச்ச வரம்பும், அடிப்படை ஊதிய வரிவிலுக்கும் உயர்த்தப்படாமல் ஏமாற்றத்துடனே உள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு துறை, வேளாண்மை ஆகியவற்றை மேம்படுத்தும் விதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர், ஆளும் கட்சி எம்.பி.க்கள் பெருமைப்படுகிறார்கள். ஆனால், ஏற்கெனவே வேலையின்மை அதிகரித்து வரும்நிலையில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் அம்சம் எங்கே என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

மே.வங்க முதல்வர் மம்த பானர்ஜி

வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வால் பிழியப்பட்ட சாமானிய மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்ஜியம்தான் இருக்கிறது. பெரிய வார்த்தைகள்தான் இருக்கிறது, குறிப்பிடத்தக்கது ஏதுமில்லை. பெகாசஸ் சுழலில் பட்ஜெட் சிக்கிவிட்டது

டெல்லி முதல்வர் அரிவந்த் கெஜ்ரிவால்

கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப்பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். மக்களை வெறுப்படையச் செய்துவிட்டது பட்ஜெட். சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. விலைவாசி உயர்வை இந்த பட்ஜெட் குறைக்காது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

இந்தியா 20 கோடி வேலைவாய்ப்புகளை இன்று தவறவிட்டுள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் பட்ஜெட்டில் இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புக்கான நிதி ரூ.73ஆயிரம் கோடியாக உயர்த்தப்படாமல் உள்ளது. நமது இளைஞர்களின் வாழ்வாதாரத்தில் கிரிமினல் தாக்குதலாக பட்ஜெட் இருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பாஜக அரசு உறுதியளித்தது. நிதியமைச்சர் பெருமையாக ரூ.2,37லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒதுக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இது கடந்த 2020-21ம் ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவு. 2020-21ம் ஆண்டில் கொள்முதலுக்காக ரூ.2.478 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. விவசாயிகள் மீதான கிரிமினல் தாக்குதல் தொடர்கிறது. மக்கள் விரோத பட்ஜெட். உணவு, உரங்கள், பெட்ரோல் மீதான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி ராஜா

நாட்டில் வளர்ந்துவரும் வேலையின்மை, சமத்துவமின்மையை இந்த பட்ஜெட் அடையாளம் காணவில்லை. ஏழை-கோடீஸ்வரர்கள் இடையே இடைவெளியைக் குறைக்க சொத்துவரி கொண்டுவரப்படவில்லை. சாமானிய மக்களுக்கு பெருந்தொற்று வாழ்க்கை கடினமாக்கியிருக்கிறது. ஆனால் அரசு தரப்பிலிருந்தும் எந்த நிவாரணமும் இல்லை. பணக்காரர்கள்தான் அதிகமாக லாபமீட்டுகிறார்கள்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கட்டுப்பாடின்றி இந்தியாவில் இயங்கஅரசு அனுமதியளித்துள்ளது, இது பெரும் அழிவுக்கு கொண்டு செல்லும். தலித் மாணவர்கல், விளிம்புநிலை மாணவர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். கல்வியிலும் சமத்துவமின்மை வரும்
 

click me!