வாழையைத் தாக்கும் முக்கியமான மூன்று நோய்களும், அதனைத் தடுக்கும் முறைகளும் இதோ... 

First Published Jul 9, 2018, 1:04 PM IST
Highlights
Here are three important diseases that affect the bananas and prevention.


1.. இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்

வாழை இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பின்னர், இலை பழுப்பு நிறக்கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருகி முழுவதும் காய்ந்துவிடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும்.

தடுக்கும் முறைகள்

பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மாங்கோ செப் 2 கிராம் அல்லது புரோப்பிகோனசோல் ஒரு மில்லி மற்றும் ஒட்டும் திரவங்களான சான்டோவிட் அல்லது டீப்பால் போன்றவற்றை கலந்து தெளிக்க வேண்டும்.

2.. கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள்

வாழையின் நடுக்குருத்து அழுகி, வளர்ச்சி குன்றி, அதற்கு சற்று முன்னர் தோன்றிய இலைத் தண்டினுள் சொருகியது போல காணப்படும். கிழங்கானது அழுகி பார்மலின் நாற்றத்தைப் போன்று தோற்றுவிக்கும். மகத்தை லேசாக காய்ந்து தண்டுப் பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழேவிழும். கிழங்கு மட்டுமே மண்ணிலேயே இருக்கும்.

தடுக்கும் முறைகள்

நோய் தாக்கப்படாத தோட்டங்களிலிருந்து வாழைக்கன்றைத் தேர்வு செய்ய வேண்டும். கிழங்கை நடுவதற்கு முன் 0.1 சதம் எமிசான் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கரைசலை நனைத்து பின்னர் நடவு செய்யலாம். 

வெப்பக்காலத்தில் நன்கு நீர் பாய்ச்சியும், குளிர் காலத்தில் நீர் தேங்காதவாறும் செய்யவும், நோய் தாக்கிய வாழைக்கு 0.1 எமிசான் கரைசலை ஒன்று முதல் 2 லிட்டர் வரை மண்ணில் ஊற்ற வேண்டும். 

மக்கிய தொழு உரம், வேப்பம் பிண்ணாக்கு போன்றவற்றை மண்ணில் இட வேண்டும். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற விகிதத்தில் கலந்து 1-2 லிட்டர் வரை ஒரு வாழைக்குக் கொடுக்கலாம்.

3.. முடிக்கொத்து நோய்

இந்த நோய் வைரஸ்களால் ஏற்படுத்தப்படுகிறது. இந்த நச்சுயிரி நோயை அசுவினிகள் பரப்புகிறது. நோய் தாக்கப்பட்ட மரங்களின் இலைகள் சிறுத்து, மஞ்சள், கரும்பச்சை கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் அடுக்கடுக்காக வெளிவரும்.

தடுக்கும் முறைகள்

தாக்கப்பட்ட மரங்களை அழித்து அப்புறப்படுத்த வேண்டும். மீதைல் டெமட்டான், ரால்போமிடான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து 2 மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். 

மேலும், மோனோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாள் இடைவெளியில் மூன்றாவது மாதத்திலிருந்து ஊசி மூலம் தண்டுப் பாகத்தில் செலுத்த வேண்டும்.

click me!