சீனாவில் கோகோ கோலா பானம் குடித்த 22 வயது இளைஞர் ஒருவர் 10 நிமிடங்களில் மரணத்தை தழுவி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் கூல்ட்ரிங்க் வகைகளில் முன்னணியில் இருப்பது கோகோ கோலா. பலரும் விரும்பி அருந்தும் இந்த பானம் ஒரு இளைஞரின் மரணத்துக்கு காரணமாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

சீனாவில் 10 நிமிடத்தில் ஒன்றரை லிட்டர் கோகோ கோலா குடித்த இளைஞர் மரணம் அடைந்துள்ளார். பெய்ஜிங்கில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது 10 நிமிடங்களில் ஒன்றரை லிட்டர் கோகோ கோலா குடித்து காட்டுகிறேன் என்று கூறி அதை செய்தும் காட்டி இருக்கிறார். அவ்வளவு தான்.. அடுத்த சில நிமிடங்களில் சுருண்டு விழ பீதியடைந்த உடனிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடி இருக்கின்றனர்.

ஆனாலும் எவ்வித பலனும் இல்லை… அந்த இளைஞர் தமது உயிரை விட்டுவிட்டார். கோகோ கோலா குடித்தவுடன் ஏற்பட்ட அதிகப்படியான வாயு நுரையீரலுக்கு சென்று ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக இளைஞர் இறந்துவிட்டார் என்று முதல்கட்ட ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும், முழுமையான விவரங்கள் அனைத்து வகையான ஆய்வுகளுக்கு பிறகே தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.