தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்பானம் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து முறையான விசாரணைக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குளப்பிடி சந்திப்பு பகுதியில் உள்ள கொக்குவில் சோதனைச் சாவடி பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இரு பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். முதலில் போலீசார் மாணவர்களை கொலை செய்யவில்லை, அந்த மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது என தெரிவித்தனர்.
ஆனால், உடற்கூறு ஆய்வுக்குப்பின் மாணவர்கள் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் எடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒத்துக்கொண்டனர். இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நவம்பர் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக, தனி அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த மாணவர்கள் படுகொலை தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என போலீஸ்துறை தலைவருக்கு அதிபர் சிறிசேனாநேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளார்.