ஆப்கானிஸ்தான் நாட்டின் தப்பிச்சென்ற அதிபர் எங்கே..? மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்த நாடு..!

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2021, 8:31 AM IST
Highlights

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

அவர் மூட்டை மூட்டையாக 4 கார்களில் பணத்தை நிரப்பிக் கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் மறுத்து இருந்தார். இரத்தக்களரியைத் தவிர்க்க வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் எனது காலணிகளை மாற்றுவதற்கு கூட நேரம் இல்லை. அணிந்திருந்த செருப்புகளுடன் காபூலை விட்டு வெளியேறினேன்’’ என அவர் தெரிவித்து இருந்தார். அதே வேளை அவர் தஜிகிஸ்தானுக்கு செல்லவில்லை. கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார் என மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌ மற்றொரு தரப்பினரோ அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

இந்நிலையில், அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

click me!