இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்வோம்...!! பிரிட்டனை மிரட்டிய சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 24, 2020, 6:57 PM IST
Highlights

அதேபோல் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம், தென்சீனக்கடல் குறித்து பிரிட்டனின் நிலைபாடு மிகத் தெளிவாக உள்ளது எனவும் பார்ட்டன் கூறினார். 

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பிரிட்டனுக்கும்  சீனாவுக்கும் இடையிலான மோதலும் தீவிரமடைந்துள்ளது. பிரிட்டிஷ் உயர் தூதர் பிலிப் பார்டன், இந்தியாவுடன் கிழக்கு லடாக்கில் சீனாவின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது என கூறிய நிலையில், இரு நாட்டுக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. இதில் பிலிப் பார்டனின் அறிக்கை தவறுகள் மற்றும் போலி குற்றச்சாட்டுகள் நிறைந்தவை என சீன தூதர் சன் வீடோங் பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை இருதரப்பு பிரச்சனை என்றும், இருநாடுகளுக்கும் அதில் போதுமான புரிதலும், இரு நாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை  தீர்க்கும் வகையில் திறன் கொண்டிருப்பதாக வீடோங்  தெரிவித்துள்ளார். எனவே இந்தியா-சீனா இடையேயான பிரச்சனையில் எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் வீடோங் கூறியுள்ளார். 

முன்னதாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்களை குறைப்பதற்கான முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவித்த பார்டன் இரு நாடுகளின் இந்த முயற்சியை வரவேற்றார். இருப்பினும் ஹாங்காங் மற்றும் கிழக்கு லடாக் பகுதி ஆகியவற்றில் சீனாவின் நடவடிக்கைகள் கவலைக்குரியது என்று கூறியதுடன், சின்சியாங் மாகாணத்தின் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் கொடுமையானது என்றும்  சீனாவை அவர் விமர்சித்தார். மேலும், சீனாவின் நடவடிக்கைகளை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதுடன், சீனாவை சமாளிக்க நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும்  பார்டர் கூறினார்.சீனாவுக்கும் எங்களுக்கும் எல்லைப் பிரச்சினை இல்லை, ஆனால் ஹாங்காங் தொடர்பாக எங்களுக்கு சில பொறுப்புகள் உள்ளன. ஹாங்காங்கில் சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிட்டன்- சீனா இடையே செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் பார்ட்டன் எச்சரித்துள்ளார். 

அதேபோல் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம், தென்சீனக்கடல் குறித்து பிரிட்டனின் நிலைபாடு மிகத் தெளிவாக உள்ளது எனவும் பார்ட்டன் கூறினார். தென்சீனக்கடல் மற்றும் ஹாங்காங் குறித்த பிரிட்டனின் இக்கருத்துக்கு சீன தூதர் வீடோங் காட்டமாக பதில் அளித்துள்ளார். அதாவது தென்சீனக்கடல் விவகாரத்தில் உண்மையான சவால்கள் பிராந்தியத்திற்கு உள்ளிருந்து வரவில்லை, பிராந்தியத்திற்கு வெளியிலிருந்துதான் வந்து கொண்டிருக்கிறது. ஹாங்காங் பிரச்சினையிலும், தென்சீனக்கடல் பிரச்சினையிலும் எந்த ஒரு வெளிநாடும் தலையிட சீனா ஒருபோதும் அனுமதிக்காது என வீடோங் கூறியுள்ளார். அமெரிக்கா போலவே தற்போது பிரிட்டனும்- சீனாவும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரட்டனை விமர்சித்துள்ள சீனா,  பிரிட்டன் சொந்த சுயாதீன வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்க வேண்டுமே தவிர, அமெரிக்காவில் இசைக்கு நடனம் ஆடக் கூடாது எனவும் கிண்டல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.  

 

click me!