மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் !! பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் !!

By Selvanayagam PFirst Published Jan 3, 2020, 10:31 PM IST
Highlights

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.

இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சுலைமணி ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது.

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. 

பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமாக இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலுக்குப் பின், இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகம் சூழும் அச்சத்தில்  கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்து உள்ளது.

ஏற்கெனவே ஈரான், அமெரிக்கா இடையில் பனிப்போர் நிலவி வந்த  நிலையில், சுலைமணி கொல்லப்பட்டதற்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடையக்கூடும். இதை உறுதி செய்யும் விதமாகவே, ஈரான் விடுத்த அறிக்கையில்  அமெரிக்கா பேராபத்து விளைவிக்கும் செயலைச் செய்து, முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டது என கூறி உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம், இந்திய பங்குச் சந்தையில் மட்டுமின்றி, ஹாங்காங், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது, பங்குகள் விலை குறைந்தன. மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், வர்த்தகத் தொடக்கத்தில் ரூ71.16 ஆக வீழ்ச்சி அடைந்தது.மத்திய கிழக்கு பதற்றங்களால் எண்ணெய் உயரும்போது பெரும்பாலான ஆசிய நாணய மதிப்பு சரிவை சந்திக்கும். 

இரு நாடுகளுக்கு இடையே அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலையில்  பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படும். மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றங்கள் அதிகரிப்பது எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்ற கவலையை எழுப்பி உள்ளது.  இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரக் கூடும் என தெரிகிறது

click me!