ச்ச்சும்மா டைம் பாஸ்க்காக தேர்தலில் நின்றவர் ஜனாதிபதியான பெரும்கூத்து....

By Muthurama LingamFirst Published Apr 23, 2019, 3:58 PM IST
Highlights

உக்ரைன் நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கொள்கை கோட்பாடுகள், தேர்தல் அறிக்கை என்று எந்த சமாச்சாரத்திலும் ஈடுபடாத டி.வி. தொடரில் அதிபராக நடித்த அனுபவம் மட்டுமே கொண்ட  காமெடி நடிகர் நிஜத்திலும்அதிபரானார்.

உக்ரைன் நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் கொள்கை கோட்பாடுகள், தேர்தல் அறிக்கை என்று எந்த சமாச்சாரத்திலும் ஈடுபடாத டி.வி. தொடரில் அதிபராக நடித்த அனுபவம் மட்டுமே கொண்ட  காமெடி நடிகர் நிஜத்திலும்அதிபரானார்.

உக்ரைனில் அதிபராக இருந்தவர் போரோஷென்கோ (Poroshenko). இவரது பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைவதை அடுத்து, அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அவர் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டி.வி.தொடரில் அதிபராக நடித்த, அரசியல் அனுபவம் இல்லாத காமெடி நடிகர் வோலோதிமிர் ஜெலன்ஸ்கி (41) (Volodymyr Zelensky) போட்டியிட்டார்.

தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுபடுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.

இதில், பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 2-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றார்.

பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.அதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆஃப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்கிறார்.

வெற்றி பெற்ற பிறகாவது ஏதாவது கருத்து என்று ஒன்றைச் சொல்லவேண்டுமே என்பதற்காக ,”இங்கே சாத்தியமில்லாதது என்ற ஒன்று இல்லவே இல்லை” என்று மட்டும் கூறியிருக்கிறார்.

click me!