தங்கள் நாட்டு மக்களுக்கு ஃபிப்சர்- பயோஎன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்.. கொரோனாவுக்கு சமாதி

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2020, 2:19 PM IST
Highlights

அடுத்த வாரம் முதல் தடுப்பூசி போட இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராக உள்ளது,  இதற்காக சுமார் 50 மருத்துவமனைகள் தயாராக உள்ளன. பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் மைதானங்கள்,  விளையாட்டு உள் அரங்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஃபிப்சர்- பயோஎன்டெக் என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்களது நாட்டில் பரவலாக பயன்பாடுத்துவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத் தடுப்பூசியை முதல் முதலாக அங்கீகரித்த நாடாக இங்கிலாந்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் முன்னணி நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.  இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது.  அதில் தடுப்பூசி 90% கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.  இந்த தடுப்பூசியால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததே இதன் சிறப்பு எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் கொரோனா வைரசை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும், 

பல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டி வந்தன. இந்நிலையில் தடுப்பூசியை வாங்க இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்திருந்தது,  டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தவும், இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. எனவே டிசம்பர் முதல் வாரம்முதலே இங்கிலாந்து சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்ஹாக்  உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஃபிப்சர் பயோடெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்பாடுகளை தீர ஆராய்ந்த இங்கிலாந்து,  தங்களது நாட்டு மக்களுக்கு பரவலாக பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசியை நாடு முழுவதும் பயன்படுத்த ஒப்புதல் வழங்கிய உலகின் முதல் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. குறிப்பாக அதிகம் நோய் பாதித்த பகுதிகளில் இந்த மருந்து வினியோகம் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கப்படலாம் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதுவரை 40 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 8 லட்சம் டோஸ்கள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ஹேன்ஹாக், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மக்களுக்கு உதவிகள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் முதல் தடுப்பூசி போட இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராக உள்ளது,  இதற்காக சுமார் 50 மருத்துவமனைகள் தயாராக உள்ளன. பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் மைதானங்கள்,  விளையாட்டு உள் அரங்குகள் தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தடுப்பூசி மக்களுக்கு கிடைக்க தொடங்கினாலும், மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வைரஸ் தடுப்பு  விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், வைரஸ் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் போன்றவை தொடர வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்தவகை தடுப்பூசியை எம்.ஆர்.என்.ஏ பவகை தடுப்பூசி எனவும், இது தொற்று வைரஸில் இருந்து ஒரு சிறிய மரபனு குறியீட்டை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.  

அதாவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலை பாதுகாக்கிறது எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகை தடுப்பூசிகள் சுமார் ஐந்து நாட்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்க முடியும் என்றும், அதிக ஆபத்தில் உள்ள மக்களை முதலில் தடுப்பூசி சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் பராமரிப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதற்கடுத்த வாரம் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது, 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது, 21 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது, இதேபோல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும்  அஸ்ட்ரா ஜெனேகா என வேறு வகையான கோவிட் தடுப்பூசிகளையும், சுமார் 100 மில்லியன் அளவு இங்கிலாந்து ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல மக்கள் பயன்பாட்டிற்கு ரஷ்யா ஸ்பூட்னிக்-வி எனப்படும் மற்றொரு தடுப்பூசியை பயன்படுத்துகிறது, மேலும் சீன ராணுவம் கேன்சினோ பயாலஜிக்கல் தயாரித்த மற்றொரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!