நாடு நாடாக செல்லும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே; அடுத்தது எங்கே செல்கிறார்?

By Dhanalakshmi GFirst Published Aug 11, 2022, 10:39 AM IST
Highlights

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் நாட்டில் இருந்து தாய்லாந்து நாடு செல்வதற்கு அனுமதி கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களது நாட்டில் தங்குவதற்கு இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அனுமதி கேட்டு இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டானி சங்கிராட் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து அந்த நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நாட்டில் பெரிய அளவில் அவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாலத்தீவு தப்பிச் சென்றார். அங்கும் எதிர்ப்பு கிளம்ப அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். முதலில் 15 நாட்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 15 நாட்களுக்கு சிங்கப்பூர் விசா நீட்டிப்பு செய்தது. இதற்கு மேல் சிங்கப்பூர் நாட்டில் தங்க முடியாது என்ற நிலை கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்பட்டது.

sri lanka crisis: இலங்கை-யை விட்டு வெளியேற மகிந்தா ராஜபக்ச-வுக்கு தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

தற்போது தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டு இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டானி சங்கிராட் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், ''இலங்கையின் உயர் பதவி அந்தஸ்து கொண்ட பாஸ்போர்ட் வைத்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே. இதை வைத்து அவர் விசா இல்லாமல், தாய்லாந்து நாட்டில் 90 நாட்களுக்கு தங்கலாம். இது தற்காலிகமான அனுமதிதான். தாய்லாந்து நாட்டில் தங்குவதற்கு கோத்தபய ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எப்போது தாய்லாந்து நாட்டிற்கு கோத்தபய ராஜபக்சே செல்ல இருக்கிறார் என்பது குறித்து டானி சங்கிராட் எதுவும் தெரிவிக்கவில்லை.

இலங்கை நாட்டை கடந்த 20 ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ராஜபக்சே சகோதர்களால்தான் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது என்பதை குறிப்பிட்டு, மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கே மக்கள் அவஸ்தைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில்தான் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராகவும்,  பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் சீன உளவுக் கப்பல்; இந்தியாவுக்கு பீஜிங் அளித்த சீற்றமான பதில்!!

click me!