கச்சத்தீவு விவகாரம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

By Manikanda PrabuFirst Published Apr 4, 2024, 11:51 AM IST
Highlights

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி விளக்கம் அளித்துள்ளார்

கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.

“கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை.” என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். “காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன.” என வெளியுறவுத்துறை அமைச்ச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சத்தீவை மீட்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால், 1974ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை மக்களவைத் தேர்தலுக்காக மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விமர்சனங்களை முன் வைக்கின்றன.

இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி விளக்கம் அளித்துள்ளார். கச்சத்தீவு விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்க்கப்பட்டப் பிரச்சினை என்ற அவர், அது குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருவது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை எனவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு: பெண் உதவியாளர் கட்டாயம்!

முன்னதாக, இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. இந்தியாவிடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கை இல்லை. அப்படி தொடர்பு இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!