sri lanka economic crisis: கழுத்தை நெறி்க்கும் பொருளாதாரச் சிக்கல்: சர்வதேச நிதியத்தின் கதவை தட்டும் இலங்கை

By Pothy RajFirst Published Apr 15, 2022, 12:12 PM IST
Highlights

sri lanka economic crisis:  சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் போதுமான உதவிகள் பெற்றுவிட்டதால் இனிமேலும் உதவிகள் கிடைப்பது கடினம் என்பதால், சர்வதே நிதியத்தைச் சந்தித்து உதவி கோர இலங்கை அரசு சார்பில் வாஷிங்டன் புறப்படுகின்றனர்.

சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடம் போதுமான உதவிகள் பெற்றுவிட்டதால் இனிமேலும் உதவிகள் கிடைப்பது கடினம் என்பதால், சர்வதே நிதியத்தைச் சந்தித்து உதவி கோர இலங்கை அரசு சார்பில் வாஷிங்டன் புறப்படுகின்றனர்.

பொருளாதாரச் சிக்கல்

Latest Videos

இலங்கை அரசு மிக மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்புக் குறைந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. உணவு, பெட்ரோல், டீசல், உரம், மருந்துகள் ஆகியவற்றைக் கூட இறக்குமதி செய்ய பணம் இல்லை.

மக்கள் கிளர்ச்சி

இதனால் உள்நாட்டில் உணவுப் பொருட்கள்விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாவிட்டதால், அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி கிளம்பியுள்ளது.
அதிபர் ராஜபக்ச, பிரதமர் மகிந்தா ராஜபக்சவை எதிர்த்து தினசரி மக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருவரும்  பதவி விலகவேண்டும் எனக் கோரி மக்கள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இலங்கை அரசுக்கு வெளிநாடுகளில் 5100 கோடி கடன் இருக்கிறது, இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது.

சர்வதேச நிதியம்

இந்தியா, சீனாவிடம் இருந்து ஏராளமான கடனுதவிகளை இலங்கை அரசு பெற்றுவிட்டது. இதையடுத்து, வெளிக்கடனை சமாளிக்கவும், உள்நாட்டுப் பிரச்சினைகளை சமாளிக்கவும் சர்வதேச நிதியத்திடம் உதவி கேட்டு இலங்கை அரசு செல்ல இருக்கிறது.
வரும 18ம் தேதி இலங்கை நிதி அமைச்சர் அலி சோப்ரி தலைமையில் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே உள்ளிட்டோர் வாஷிங்டன் செல்ல இருக்கிறார்கள். 

400 கோடி டாலர்

இலங்கை நிதிஅமைச்சர் அலி சாப்ரி ப்ளூம்பெர்க் அளித்த பேட்டியில் கூறுகையில் “ இலங்கைக்கு அவசரமாக நிதியுதவி தருமாறு சர்வதேச நிதியத்தை நாட உள்ளோம். வரும் 18ம் தேதி இலங்கை அரசு சார்பில் ஒரு குழு சர்வதேச நிதியத்தைச் சந்தித்து உடனடியாக 400 கோடி டாலர் உதவி கோர இருக்கிறோம். 

இந்த நிதியுதவி மூலம் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் இறக்குமதி, சிறிதளவு கடன் அடைப்பு ஆகிவற்றுக்காக உதவி கோர இருக்கிறோம். இந்த நிதியுதவியையும் மிக விரைவாக அளிக்குமாறும் கேட்டுக்கொள்ள இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்

2016ம் ஆண்டு உதவி

கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு இலங்கைக்கு ஐஎம்எப் உதவி அளித்தது. அப்போது 150 கோடி டாலர்அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை உச்ச கட்ட வளர்ச்சியில் இருந்தது, பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியில் சென்றது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை மூலம் வரும் வருவாய் குறைந்தவுடன் அந்நியச் செலவாணி கையிருப்பும் கரைந்தது. இதையடுத்து சீனா, இந்தியாவிடம் உதவிகளை இலங்கை பெற்றது. அதன்பின் உலகவங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கியிடமும் உதவிகளைக் கோரியுள்ளது


 

click me!