நேரம் பார்த்து சரியாக அடித்த தமிழர்கள்... இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு!

By vinoth kumarFirst Published Nov 4, 2018, 12:35 PM IST
Highlights

இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டணி அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டணி அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. இதனால் ராஜபக்சே பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக கடந்த மாதம் 26-ம் தேதி நீக்கினார்.  

பின்பு யாரும் எதிர்பாராத விதமாக புதிய பிரதமராக ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் குற்றம்சாட்டின. இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுவதாக இருந்தது. ஆனால் ராஜபக்சே தனது பெரும்பான்மைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாடாளுமன்றத்தை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

உடனடியாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யாவை சந்தித்து ரணில் விக்ரமசிங்கே இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் அதிபரிடமே உள்ளது என்று கூறினார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கே ஒரு அதிரடி முடிவை எடுத்தார். ராஜபக்சே மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்.  இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளதாக இக்கட்சியின் எம்.பி விளந்திரையன் கூறியுள்ளார். 

225 உறுப்பினர்கள் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 103 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. ராஜபக்சேவுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள 16 எம்.பி.க்கள் உட்பட மீதமுள்ள 22 எம்.பிக்கள் ராஜபக்சேக்கு எதிராக வாக்களிப்பர் என தகவல் வெளியாகியுள்ளது.

click me!