
மத்திய பிரதேசத்தில் நுழைய முயன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 6 வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் தங்களது விளை பொருட்களை சாலைகளின் மத்தியில் கொட்டி போராட்டம் நடத்தினர். மான்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது.
போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் விவசாயிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதனால் மான்ட்சார் மாவட்டத்திலும் அதை சுற்றியுள்ள ஊர்களிலும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வன்முறை பரவுவதை தடுக்க போலீஸ் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேசம் சென்றார். மத்திய பிரதேச எல்லைக்குள் செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்.