ஜவஹர்லால் நேருவின் பல்மருத்துவரின் மகன் பாகிஸ்தான் அதிபராகத் தேர்வு!

By vinoth kumarFirst Published Sep 5, 2018, 4:37 PM IST
Highlights

இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் தனிப்பட்ட பல்மருத்துவராக இருந்தவரின் மகன் பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் தனிப்பட்ட பல்மருத்துவராக இருந்தவரின் மகன் பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பிரதமர் இ்ம்ரான் கானின் தெஹரீக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றுள்ளார். வரும் 8-ம் தேதி புதிய அதிபராக இவர் பொறுப்பேற்க உள்ளார். 

பாகிஸ்தானின் அதிபராக இருப்பவர் மம்னூன் உசேன். இவரின் பதவிக்காலம் வரும் 8-ம் தேதியோடு முடிகிறது. இதனால் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஆரிப் ஆல்வியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் சார்பில் மவுலானா பசல் உர் ரஹ்மானும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மொத்தமுள்ள 430 வாக்குகளில் ஆரிப் ஆல்வி 212 வாக்ககுள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். பாகிஸ்தான் மக்கள் சார்பில் போட்டியிட்ட ஆசன் 81 வாக்குகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் வேட்பாளர் ரகுமான் 131 வாக்குகளும் பெற்றனர். புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆரிப் ஆல்வி, இம்ரான்கானின் தெஹரிக் இ இன்சாப் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். பல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிரதமர் இம்ரான் கானுக்கு ஆரிப் ஆல்வி மிகவும் நெருக்கமானவர். 

அதுமட்டுமல்லாமல் ஆல்வியின் வரலாற்றைப் பார்த்தால், அவர் இந்தியாவுக்கும் மிகவும் நெருக்கமானவர். ஆல்வியின் தந்தை ஹபிப் உர் ரஹ்மான் இலாகி ஆல்வி ஒரு பல்மருத்துவர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருக்குவுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் தனிப்பட்ட பல்மருத்துவராக ஹபிப் உர் ரஹ்மான் ஆல்வி இருந்தார் என்று பாகிஸ்தான் தெஹ்ரிக் இஇன்சாப் கட்சியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பின், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடியேறினார்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு பாகிஸ்தானில் குடியேறி அதிபராக பதவி ஏற்றவர்களில் 3-வது மனிதர் ஆல்வி ஆவார். இதற்கமுன் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் பிறந்தது டெல்லியில்தான். பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பின் அவரின் குடும்பத்தார் பாகிஸ்தானுக்கு சென்றனர். தற்போது அதிபராக இருக்கும் மம்னூன் உசைுனுக்கு ஆக்ரா பூர்வீகம். பிரிவிணைக்குப் பின் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஆரிப் ஆல்வி கடந்த 1947-ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார். இவரின் தந்தை ஆல்வி , முகமது அலி ஜின்னா குடும்பத்தாருடன் மிகுந்த நெருக்கம் கொண்டவர்.

ஆரிப் ஆல்வியின் அரசியல் வாழ்க்கை கடந்த 50ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ராணுவ ஆட்சியாளர் அயுப்கானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதில் இருந்து ஆரிப்பின் அரசியல்வாழ்க்கை தொடங்கியது. அப்போது ஆரிப் லாகூர்ின் பஞ்சாப் நகரில் உள்ள பல்மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். அதன்பின் இம்ரான் கானுடன் இணைந்து பிடிஐ கட்சியை தொடங்கினார். 2006 முதல் 2013-ம்ஆண்டுவரை கட்சியின் பொதுச்செயலாளராக ஆரிப் பணியாற்றினார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், எம்.பி.யாகவும் ஆரிப் இருந்துள்ளார். பல்மருத்துவத்துறையில் பல்வேறு பதவிகளை ஆரிப் வகித்துள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனில் பல்மருத்துவத்தில் முதுகலைப் பட்டத்தையும் ஆரிப் பெற்றார். பாகிஸ்தானின் பல்மருத்துவ சங்கத்தை முக்கிய உறுப்பினராகவும், தலைவராகவும் ஆரிப் பணியாற்றியுள்ளார்.

click me!