Omicron : டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரான்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Dec 3, 2021, 3:41 PM IST
Highlights

டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவருக்கு 66 வயது மற்றொருவருக்கு 46 வயது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. தென்ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது. தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து 35 ஆயிரத்து 670 பேர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் மீண்டும் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம், தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!