உலகில் கொரோனாவே இல்லாத நாடு ஒன்னு இருக்குதாம்..! எது தெரியுமா..?

By Manikandan S R SFirst Published Apr 3, 2020, 12:36 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்குவதற்கு முன்பாகவே வடகொரியா உஷார் ஆகி இருக்கிறது. அந்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டனர். மேலும் வடகொரியாவில் தங்கியிருந்த பிற நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் உடனடியாக சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இந்தியா என உலகின் 200 நாடுகளுக்கு பரவி இதுவரையில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயிருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்படாத ஒரு நாடாக வட கொரியா இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. வடகொரியாவில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும்கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் என 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் 2,280 என்பதாக இருந்த நிலையில் பலருக்கு கொரோனா குறித்த எந்த அறிகுறியும் இல்லை என்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்குவதற்கு முன்பாகவே வடகொரியா உஷார் ஆகி இருக்கிறது. அந்நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டனர். மேலும் வடகொரியாவில் தங்கியிருந்த பிற நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் உடனடியாக சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வடகொரியாவில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு அதன் காரணமாகவே அங்கு பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய ஜனவரி மாதம் முதலே வடகொரியா தனது நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது. வைரஸின் பிறப்பிடமான  சீனாவிடம் இருந்து அனைத்து வணிக தொடர்புகளையும் வடகொரியா துண்டித்துள்ளது. எனினும் வடகொரியாவில் கொரோனா தாக்குதல் இல்லை என்பது சந்தேகத்தை கிளப்புவதாக பல நாடுகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!