தனி நாட்டையே உருவாக்கி அதிபரான நித்யானந்தா... அதிகாரப்பூர்வமாக அறிவித்து இந்திய அரசுக்கே சவால்..!

By Thiraviaraj RMFirst Published Dec 2, 2019, 5:55 PM IST
Highlights

நித்யானந்தா சொந்த தீவை வாங்கி தனி நாட்டையே உருவாக்கி விட்டார். அதில் அரசாங்கத்தையும், அந்நாட்டின் கொடி, லோகோ, யுனிவர்சிட்டி, அரசு துறைகள் என பலவற்றையும் அறிவித்துள்ளார். 
 

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க பக்தர்கள் மூலம் வேலையை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில், பிடதியிலிருந்து ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கியுள்ளார் நித்தியானந்தா. 

அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார். இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காட்மாண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்மாண்ட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 27 பேர் கிளம்பி, அந்தத் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள். இப்போது அந்தத் தீவை தனி நாடாக உருவாக்கி விட்டார் நித்யானந்தா. அவருடன் 200 பேர் அந்தத் தீவில் வசித்து வருகின்றனர்.

ஒரு நாட்டை உருவாக்கக் கூடிய அளவிற்கு பணம் எப்படி கிடைத்தது? நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் துலாபாரம் நிகழ்ச்சி ஆண்டுக்கு நான்கு முறை நடக்குமாம். அப்போது நித்தியானந்தாவின் எடைக்கு நிகரான தங்கத்தை பக்தர்கள் வழங்குவர். இதுவரை அப்படிப் பெறப்பட்ட நகைகளின் எடை மட்டுமே ஆறு டன் எனக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பகுதி இப்போது நித்தியானந்தாவின் தீவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. 

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்ததை மாற்றி தனி நாடாக மாற்றி விட்டார்.  நித்தியானந்தா தரப்பிலிருந்து ஈக்குவடார் நாட்டின் அரசு உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தங்களது தீவை தனிப்பிரதேசமாக அறிவிக்க அனுமதி வேண்டும் என்று நித்தியானந்தா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஓர் இடத்தை தனிநாடாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் அவசியம். அதேபோல் புதிதாக ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டுமென்றால், அதற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உலக நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான வேலையை சில மாதங்களுக்கு முன்பே நித்தியானந்தா தரப்பு ஆரம்பித்து தற்போது முடித்தும் விட்டது. 

https://kailaasa.org/ என்கிற தனது கைலாசா நாட்டின் வெப்சைட்டை ஆரம்பித்து அதன் மூலம் தனி நாட்டை அறிவித்து விட்டார் நித்யானந்தா. அந்த நாட்டின் அரசையும், துறைகளையும் அறிவித்து விட்டார். அந்த நாட்டின் கொடி, தேசிய விலங்கு, தேசிய மலர், தேசிய மரம் என அத்தனையையும் அறிவித்து இருக்கிறர். யுனிவர்சிட்டி, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வீடு, வணிகம் என அனைத்தையும் நிர்வகித்து விட்டார் நித்தி. 

அரசாங்க ரீதியாக துறைகளையும் அறிவித்து விட்டார். அதனை இந்து தேசமாகவும் அறிவித்து விட்டார். அவர் மீது வழக்கு உள்ள நிலையில் தனி நாட்டை அறிவித்து உள்ளதால் இந்தத் தகவல் இந்திய அரசையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

click me!