நேபாள பிரதமர் கே.பி. ஒலி திடீர் ராஜினாமா! பணிய வைத்தை GenZ போராட்டம்!

Published : Sep 09, 2025, 02:39 PM IST
Nepal Prime Minister KP Sharma Oli resigns

சுருக்கம்

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அரசியல் தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இளம் தலைமுறையினர் நடத்திய வரலாறு காணாத போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

நாட்டின் முக்கிய தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டதோடு, அமைச்சர்களும் பதவி விலகியதால் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

இணையத்தடைதான் காரணம்:

செப்டம்பர் 4ஆம் தேதி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ் (X) உள்ளிட்ட 26 முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு நேபாள அரசு திடீரெனத் தடை விதித்தது. தகவல் தொடர்புக்கும், கருத்து பரிமாற்றத்திற்கும் சமூக வலைத்தளங்களை அதிகம் சார்ந்துள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, 'ஜெனரல் Z' எனப்படும் இளம் தலைமுறையினர் அமைதியான முறையில் போராட்டங்களைத் தொடங்கினர். அரசாங்கம் இந்தப் போராட்டங்களை அடக்க முயற்சித்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.

தடை நீக்கப்பட்டும் தணியாத கோபம்:

செப்டம்பர் 7ஆம் தேதி, அரசு சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கினாலும், அது போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை. பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் மீதான ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் குறித்த குற்றச்சாட்டுகளால் ஏற்கனவே கோபமடைந்த மக்கள், செப்டம்பர் 8ஆம் தேதி போராட்டத்தை வன்முறையாக மாற்றினர்.

அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல்:

போராட்டக்காரர்கள் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பௌடெல் ஆகியோரின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. முன்னாள் பிரதமர்களான புஷ்ப கமல் தாஹல் (பிரசண்டா) மற்றும் ஷேர் பகதூர் தேவுபா ஆகியோரின் வீடுகளும் சேதமடைந்தன. இதேபோல், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், நிதி அமைச்சர் பிஷ்ணு பௌடெல் உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. எரிசக்தித் துறை அமைச்சர் தீபக் கட்காவின் வீடு தீக்கிரையானது.

பிரதமர் கே.பி. ஒலி பதவி விலகல்:

நிலைமையைக் கட்டுப்படுத்த, தலைநகர் காத்மாண்டு, லலித்பூர், பிருகுஞ்ச் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பாளர்கள் ஊரடங்கை மீறி சாலைகளில் இறங்கி போராடினர். பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் அழுத்தம் காரணமாக உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும், விவசாயத்துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரியும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இது பிரதமரின் நிலையை மேலும் பலவீனப்படுத்தியது.

இறுதியில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் காக்கவும், மக்களின் கோபத்தைத் தணிக்கவும் வேறு வழியில்லாமல் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனநாயக உரிமைகளை நசுக்க முயற்சிப்பதாகக் கூறி எழுந்த இந்த எதிர்ப்பு, ஒரு பிரதமரின் பதவி விலகலில் முடிந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?