
‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
பூமியில் நெருக்கடி அதிகரித்து வருவதாலும், இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வதாலும் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது பற்றி விஞ்ஞானிகளை தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பிவைத்தது.
பிப்ரவரி மாதம் 18-ம் தேதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசேரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம், தனது பணிகளை தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகத் துள்ளியமாக உள்ள இந்த புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.
ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் அம்சங்களுக்கும், பூமியின் நதிகளில் உள்ள வடிவங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துளனர். சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் நீர்நிலைகள் இருந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.