
பாகிஸ்தானில் கூட்டுபாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண், அந்த துயரத்தில் இருந்து மீண்டுவந்து ‘பேஷன் ஷோ’வில் பங்கேற்று பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக இவர் பெண்களுக்கு துணிச்சலையும், வாழ்க்கையில் பிடிப்பையும் உண்டாக்கியிருக்கிறார்.
பலாத்காரம்
கராச்சி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் முக்தர் மயி. கடந்த 2002-ம் ஆண்டு கிராமத்தில் உள்ள மற்றொரு குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, உள்ளூர் பஞ்சாயத்து இவரை கூட்டு பலாத்காரம் செய்யவும், நிர்வாணப்படுத்தவும் உத்தரவிட்டது. அதன்படி பலர் முக்தரை மயியை பலாத்காரம் செய்து, கிராமத்தில் நிர்வாணமாக நடக்க வைத்து அசிங்கப்படுத்தினர்.
தண்டனை
பாகிஸ்தானில் இதுபோல் எந்த பெண்ணுக்கும் நேர்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள். ஆனால், முக்தர் மயி, துணிச்சலாக உச்சநீதிமன்றம் சென்றார். தன்னை அலங்கோலப்படுத்திய பஞ்சாயத்து நிர்வாகிகள், பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் என 14 பேருக்கும் முக்தர் மயி தண்டனை பெற்றுக் கொடுத்தார். ஆனால், மேல்முறையீட்டில் அனைவரும் தப்பித்தனர்.
தொண்டு அமைப்பு
அதன்பின்,முக்தர் மயி வீட்டில் முடங்கிக்கிடக்காமல் சர்வதேச அளவில் பெண்களின் உரிமைக்காக பாடுபடும் அமைப்புகளுடன் சேர்ந்து, ஒரு அமைப்பை தனது மீராவாலா கிராமத்தில் தொடங்கினார். அந்த அமைப்பு மூலம் தற்போது பெண்களுக்கு தங்குமிடத்தையும், ஒரு பள்ளியையும் நடத்தி வருகிறார்.
பேஷன் ஷோ
இந்தநிலையில், தற்போது 44-வயதாகும் முக்தர் மயி, பேஷன் ஷோ வில் கலந்துகொண்டு மற்ற பெண்களுக்கு நம்பிக்கை ஊட்ட முடிவு செய்தார். அதன்படி கராச்சி நகரில் செவ்வாய்கிழமை நடந்த பேஷன்ஷோவில் பங்கேற்ற முக்தர் மயிக்கு அங்குள்ள ஆடை வடிவமைப்பாளர்களும், மாடல்களும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பு
ரோஜினா முனிப் என்ற ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கி, பச்சை நிறத்தில் மேலாடையும், மஞ்சள் நிறத்தில் பட்டு பேண்ட் உடுத்தி முக்தர் மயி பேஷன் ஷோவில் பங்கேற்று மற்ற மாடல்களுடன் நடந்து வந்தார். அவருக்கு கைதட்டி அனைவரும் உற்சாகப்படுத்தினர்.
நம்பிக்கை இழக்கக் கூடாது
அப்போது முக்தர் மயி நிருபர்களிடம் கூறுகையில், “ பாகிஸ்தான் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இந்த பேஷன் ஷோவில் பங்கேற்றேன். நான் எடுத்து வைத்திருக்கும் ஒரு அடி, மற்ற பெண்கள் அடுத்த அடி எடுத்து வைக்க உதவியாக இருக்கும். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையில் எந்த துயரம் ஏற்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. நாம் பலவீனமானவர்கள் அல்ல என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நமக்கும் இதயம், மூளை இருக்கிறது. சிந்திக்கும் திறன் இருக்கிறது. அநீதி இழைக்கப்பட்டால் நம்பிக்கை இழக்காதீர்கள், நிச்சயம் நீதி ஒருநாள் கிடைக்கும்'' எனத் தெரிவித்தார்.