மெக்சிக்கோவில் பயங்கர பூகம்பம்; 21 பள்ளி குழந்தைகள் உள்பட 250 பேர் பலி!

First Published Sep 20, 2017, 3:43 PM IST
Highlights
Mexico earthquake topples buildings nearly 250 dead including 21 children


மெக்சிக்கோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் மிக சக்தி வாய்ந்த பூகம்பம் நேற்று ஏற்பட்டது. இதில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் 21 பேர் உள்பட 250 பேர் பலியானார்கள்.

 மெக்சிக்கோ சிட்டி, மோரலாஸ், பியூப்லா, குரிரோ ஆகிய நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கின்றன. இடிபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

நிலநடுக்கம்

மெக்சிக்கோ நாட்டில் நேற்று நண்பகலில் மக்கள் அனைவரும் தங்களின் இயல்பு வேலையை கவனித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென கட்டிடங்கள் குலுங்கத் தொடங்கி, வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறின. இதைப் பார்த்த மக்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடி வந்தனர்.

7.1 ரிக்டர்

மேலும் அலுவலகங்களில், ஷாப்பிங் மால்களில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடி வந்தனர். ஆனால், சில வினாடிகளில் மெக்சிக்கோ நாட்டில் பல நகரங்களை இந்த பூகம்பம் சின்னாபின்னமாக்கியது. இந்த பூகம்பம்க ரிக்டரில் 7.1 அளவாக பதிவானது.

இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளிலும்,தெருக்களில் குவிந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ், மீட்புபடை வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

மீட்புப்பணி

இந்த பூகம்பம் ஏற்பட்டதையடுத்து, நாடுமுழுவதும் மீட்ப்படையினர் உஷார் படுத்தப்பட்டு மீட்புப்பணியில் இறங்கினர். இவர்களோடு போலீசார், கடற்படையினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள், மோப்ப நாய்கள் என மீட்புப் பணியில் தீவிரமாக பல்வேறு நகரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிக்கூடம் இடிந்தது

இதில் நெஞ்சை உருக்கும் விதமாக, மெக்சிக்கோ சிட்டி நகரின் தெற்குப் பகுதியில் என்ரிக் ரெப்சாமென் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. 3 அடுக்கு மாடியில் செயல்பட்டு வந்த இந்த பள்ளி பூகம்பத்தில்  இடிந்து தரைமட்டமானது. இதில் பள்ளியில் இருந்த குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர்.

21 குழந்தைகள் பலி

இது குறித்து மெக்சிக்கோ கடற்படை மேஜர் ஜோஸ் லூயிஸ் வெர்கேரா கூறுகையில், “ ெமக்சிக்கோ சிட்டியில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 குழந்தைகள், 5 ஆசிரியர்கள் பலியானார்கள். 30 முதல் 40 வரை இன்னும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம், 11 குழந்தைகள் வரை சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியர், ஒரு குழந்தை இடிபாடுகளில் சிக்கி இருப்பதைப் பார்த்து அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளித்து வருகிறோம்’’ என்றார்.

இதற்கிடையே பூகம்பம் நடந்த பகுதிகளை மெக்சிக்கோ அதிபர் என்ரிக் பெனா நீடோ விரைந்து வந்து பார்வையிட்டு, மீட்புப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

250 பேர் பலி

அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாட்டில் இப்போது ஏற்பட்ட பூகம்பத்தில் துரதிருஷ்டவசமாக குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் பலாயாகியுள்ளனர். பள்ளிகள், கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன’’ என்றார்.

பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் லுயிஸ் பெலிப் பியூன்டே  டுவிட்டரில் கூறுகையில், “ நாட்டில் பியூப்லா, மோரிலாஸ், மெகிச்கோசிட்டி, குரிரோ ஆகிய நகரங்களில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கே 250 ஆக உயர்ந்துள்ளது’’ என்றார்.

மீட்புபணி தீவிரம்

பூகம்பம் ஏற்பட்ட  பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருவதால், இதனால், சாலைகளிலும், நெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சாலைகளில் கிடத்தி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளும் வெளியே கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த மருத்துவமனைகளில் இருந்து உடனடியாக நோயாளிகள் வெளியேறவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தங்களின் உறவினர்களுக்கு கூறி உதவிகளை கேட்டு வருகின்றனர்.

இரங்கல்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிக்கோ நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா நாட்டு  அதிபர் ஜஸ்டின் டுருடியு ஆகியோர் இரங்கள் தெரிவித்து, தேவையான உதவிகளை அளிப்போம் என உறுதியளித்துள்ளனர்.

நினைவு தினத்தில் நடந்த சோகம்
கடந்த 1985ம் ஆண்டு இதேபோன்ற பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட 10 ஆயிரம் பலியானார்கள். அதன் 32 -வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

12 நாட்களில் மீண்டும்...

மெக்சிக்கோவின் தெற்கு மாநிலங்களான ஆக்சாக்கா, சிப்பாஸ் நகரங்களில் கடந்த 12 நாட்களுக்கு முன் இதேபோன்ற பூகம்பம் ஏற்பட்டது. இதில் 100 பேர் பலியானார்கள், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்குள் அடுத்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

click me!