சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு ! அச்சத்தில் உலக நாடுகள்

By Raghupati RFirst Published Oct 10, 2022, 6:29 PM IST
Highlights

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவது அந்த நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், கொரோனா அதிகரித்து வருவது அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் நிர்வாகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டு இருந்த காரணத்தால் புதிய தினசரி கொரோனா எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து நாட்டின் பல நகரங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  

தற்போது, சீனாவின் ஷான்சி மாகாணத்தின் வடக்கில் இருக்கும் பென்யாங் நகரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹோஹோட் தலைநகரான இன்னர் மங்கோலியா பகுதியில், செவ்வாய்கிழமை ( நாளை) முதல் நகருக்குள் வெளியாட்கள், வாகனங்கள் நுழைவது தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் ஹோஹோட் நகரில் 2,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க..திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்.. நீதி கேட்ட பெண்ணுக்கு கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு !

உலகிலேயே இன்னும் சீனாவில்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிர்வாகமும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.  சமீபத்தில்தான், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது நாட்டின் மீதான பெயருக்கு களங்கம் ஏற்படும் என்ற அச்சத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், விடுமுறை அறிவிக்கப்பட்ட அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களுக்கு அவர்களது பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இருந்தபோதும், தினசரி பரவல் 600ல் இருந்து 1800க்கும் அதிகமாக பரவியுள்ளது. ஜீரோ கோவிட் என்ற கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கைகள் அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், சிறு குறு தொழில்களையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. தற்காலிக தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  வரும் வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் தொழில் அபிவிருத்தி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் மேற்கில் இருக்கும் ஜின்ஜியாங்  மாகாணத்தில் இருக்கும் மங்கோலியா பகுதியில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பீஜிங்கிலும் நடப்பாண்டின் துவக்கத்தில் அதிகமாக கொரோனா பரவல் இருந்தது. தற்போது குறைந்து இருந்தாலும், கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஷாங்காய் மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

click me!