இந்தியர்கள் மீது அன்பு காட்டும் பைடன்… வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி நியமனம்!!

By Narendran SFirst Published Dec 11, 2021, 2:50 PM IST
Highlights

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவனை வெள்ளை மாளிகை அலுவலக பணியாளர்கள் தேர்வு துறைக்கு இயக்குநராக அதிபர் பைடன் நியமித்துள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவனை வெள்ளை மாளிகை அலுவலக பணியாளர்கள் தேர்வு துறைக்கு இயக்குநராக அதிபர் பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் இந்தியர்களை அதிகாரமிக்க பதவிகளில் நியமித்து வருகிறார். அதிபர் தேர்தலுக்கு முன்பே இந்தியர்களுக்கென பிரத்யேகமாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இதன் மூலம் இந்திய நாட்டின் மீதான அவரது அன்பு வெளிப்பட்டது. அது தேர்தலோடு நின்றுவிடாமல், வென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் தொடர்வது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபராக்கினார். அதேபோல அமெரிக்காவின் நிர்வாகப் பொறுப்புகளை இந்தியர்கள் வசம் ஒப்படைத்துள்ளார். இந்தியர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்த ஹெச்1பி விசாவை முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்த நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் வீசா கட்டுப்பாடுகளை தளர்த்தினார். இது இந்தியர்களிடையே வரவேற்பு பெற்றது. அந்த வகையில் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவனை வெள்ளை மாளிகை அலுவலக பணியாளர்கள் தேர்வு துறைக்கு இயக்குநராக அதிபர் பைடன் நியமித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களை சோதிப்பதில் மிக முக்கியப் பங்கு இத்துறைக்கு உண்டு. இந்த துறையின் இயக்குநராக இருந்தவர் கேத்தி ரஸ்ஸல். ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இவரை யுனிசெப் நிர்வாக இயக்குநராக நியமிப்பதாக அறிவித்தார். இதன் பின் தான் ரஸ்ஸல் உடன் இணைந்து பணியாற்றிய ராகவனை அதிபர் பைடன் புரோமோட் செய்துள்ளார். கவுதம் ராகவன் இந்தியாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இந்தியர்கள் என்றாலும் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து விட்டனர். அமெரிக்காவின் சியாட்டிலில் வளர்ந்த ராகவன், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காலத்திலேயே அதிகாரமிக்க பதவிகளில் இருந்தார். குறிப்பாக இவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால், 2011-2014 வரை ஒபாமாவின் LGBTQ+ சமூகம் மற்றும் ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவுவாசிகளின் இணைப்பாளராக பணியாற்றினார். தற்போது ராகவன் தனது கணவர் மற்றும் மகளுடன் வாஷிங்டனில் வசிக்கிறார். கவுதன் ராகவன் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குநராகவும், அதிபரின் தனி துணை உதவியாளராகவும், பணியாற்றி வந்தார்.

குறிப்பாக கவுதன் ராகவன் ஜோ பைடனின் அறக்கட்டளைக்கு முக்கிய ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த நிலையில், நீண்ட நெடும் அனுபவம் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக கவுதம் ராகவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பல ஆண்டுகள் தன்னுடன் பனியாற்றிய கவுதம் ராகவனை இந்த முக்கிய பொறுப்பில் நியமித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அமெரிக்க அதிபருக்கான அலுவலக தலைவர் பதவியை வகித்த கேத்தி ரசல், யுனிசெப் அமைப்பின் செயல்பாட்டு இயக்குநராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் ந்த பதவியில் பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்திய வம்சாவளியரான கவுதம் ராகவன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது யுனிசெப் தலைவர் கேத்தி ரசலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கவுதம் ராகவனுக்கு உண்டு என்பது குறிப்பிடத்ததக்கது.

click me!