Beijing winter olympics : பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்… அமெரிக்கா, ஆஸி.யை தொடர்ந்து கனடாவும் புறக்கணிப்பு!!

By Narendran SFirst Published Dec 9, 2021, 3:25 PM IST
Highlights

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து கனடாவும் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து கனடாவும் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.  இதே போல் கடந்த 1980 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்தது.

அந்த சமயத்தில் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக அமெரிக்கா கூறியது.  இதற்கு பதிலடியாக சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் நட்பு நாடுகள் இணைந்து, 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தன. அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து அதன் நட்பு நாடான ஜப்பானும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணித்தது. இதனை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  இந்த நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து கனடாவும் பெய்ஜிங்-ல் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இன சிறுபான்மையிருக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுகொண்டிருந்த நிலையில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை  தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. ஒன்டாரியோ நகரத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். தூதரக ரீதிலான புறக்கணிப்பு என்றால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் குறிப்பிட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால் ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில் அந்நாட்டுகளின் அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள். இதனிடையே பெய்ஜிங் குளிர்கால  ஒலிம்பிக் போட்டிகயை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து நியூஸிலாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிக்கும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகள் புறக்கணிப்பதற்கான விலையை கொடுக்க நேரிடும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.  

click me!