உலக வங்கி தலைவராக பொறுப்பேற்றார் அஜய் பங்கா; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

By SG BalanFirst Published Jun 3, 2023, 3:29 PM IST
Highlights

63 வயதான அஜய் பங்கா வெள்ளிக்கிழமை உலக வங்கியின் 14வது தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தப் பதவியை எட்டியுள்ள முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி அமெரிக்கரான அஜய் பங்கா வெள்ளிக்கிழமை உலக வங்கியின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டு உலகளாவிய நிதி நிறுவனங்களில் ஒன்றின் தலைவரான முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மே 3 அன்று, உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் 63 வயதான அஜய் பங்காவை உலக வங்கியின் 14வது தலைவராக தேர்வு செய்தனர். இவர் ஐந்தாண்டு காலத்திற்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.

உலக வங்கி வங்கியின் தலைவராக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால், அவர் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனையடுத்து அந்தப் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யா உக்ரைன் போர்: 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் உக்ரைன் ராணுவ வீரர்கள்.. வைரல் வீடியோ..

சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அஜய் பால்சிங் பங்காவை ஜோ பைடன் பரிந்துரை செய்தார். உலக வங்கி தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், அஜய் பங்காவைத் தவிர வேறு யாரும் உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை.

அஜய் பங்கா மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனால் உலக வங்கி தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. அதன்படி வெள்ளிக்கிழமை அஜய் பங்கா உலக வங்கி தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

“இன்று உலக வங்கியின் தலைவராக புதிய பொறுப்பை ஏற்கும் அஜய் பங்கா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எங்கள் நிறுவனங்களுக்கிடையேயான ஆழமான கூட்டாண்மை மூலம் நல்லதைச் செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் நான் எதிர்நோக்குகிறேன்" என சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 3-வது மிகப்பெரிய ரயில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல்..

அஜய் பங்கா இந்தியாவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். 2010 மற்றும் 2021 வரை மாஸ்டர் கார்டை சிஇஓ பதவியில் இருந்தவர். அமெரிக்கன் செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ் மற்றும் டவ் இன்க் ஆகியவற்றின் உயர் பதவிகளிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளார்.

வேட்புமனுவை தாக்கல் செய்தபோது பேட்டி அளித்த அஜய் பங்கா, உலகளாவிய பிரச்சனைகளுக்கு நிதியுதவியை சமாளிக்க அதிக தனியார் துறை நிதியைப் திரட்ட விரும்புவதாகக் கூறினார். "தனியார் துறை பங்கேற்பு இல்லாமல் போதுமான நிதி திரட்ட இயலாது" என்ற அவர், உலக வங்கி தன் இலக்குகளை அடைய ஆபத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய தனியார் நிதிகளை திரட்டும் அமைப்பை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

வங்கி வேலை வேண்டுமா? 8812 காலிப் பணியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்!

click me!