
வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விருப்பத் தேர்வுகளில் சீனாவும் ஒன்றாகும். குறிப்பாக, ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்தியின்படி, இந்திய மாணவர்கள் அதிக அளவில் எம்.பி.பி.எஸ். படிப்புகளைத் தொடர்வதற்காக சீனாவுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், சீனாவில் இந்தி மொழியைப் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, பல்கலைக்கழக அளவில் சர்வதேசப் படிப்புகளுக்கான துறைகளில் இந்தியும் ஒரு பாடமாக உள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, தற்போது சீனாவில் உள்ள பள்ளிகளிலும் இந்தி மொழி ஒரு பாடப்பிரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, ஷாங்காய் நகரில் உள்ள பிரிட்டானிகா சர்வதேச மேனிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியையாகப் பயிற்றுவிக்கவுள்ள பவ்யா மேத்தாவை, சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர் இன்று கௌரவித்தனர்.
சீனாவில் உள்ள பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்தச் செயல்பாடு, இரு நாடுகளின் வருங்காலத் தலைமுறையினரிடையே ஆழமான கலாசார உறவுக்கான புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவ்யா மேத்தா, இந்தியாவின் போர் வீரரும், கீர்த்தி சக்ரா விருது பெற்றவருமான பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.