உக்ரைன் போர் முடியாவிட்டால் டோமஹாக் ஏவுகணை வரும்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

Published : Oct 13, 2025, 10:47 PM IST
Putin Trump Tomahawk Missiles

சுருக்கம்

உக்ரைன் போர் தொடர்ந்தால், நீண்ட தூரம் சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க நேரிடும் என ரஷ்யாவுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் ஆழமான இராணுவத் தளங்களைத் தாக்கும் திறன் கொண்டவை.

மூன்று ஆண்டுகளாகத் தொடரும் உக்ரைன் போரை ரஷ்யா விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டோமஹாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கத் தயங்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியபோது டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டார். அப்போது, செலன்ஸ்கி அமெரிக்காவிடம் இருந்து டோமஹாக் ஏவுகணைகள் உட்பட அதிநவீன ஆயுதங்களைக் கோரியுள்ளார்.

டிரம்ப் எச்சரிக்கை

அதிபர் டிரம்ப் மேலும் கூறியதாவது: "இந்த ஏவுகணைகளை அமெரிக்கா நேரடியாக உக்ரைனுக்கு விற்காது. ஆனால், அவற்றை நேட்டோ அமைப்பிற்கு வழங்குவோம். அங்கிருந்து அவை உக்ரைனியர்களுக்கு வழங்கப்படும். போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நாங்கள் அதைச் செய்ய நேரிடலாம் என்று விளாடிமிர் புட்டினிடம் கூறுங்கள். டோமஹாக் ஏவுகணைகள் தங்கள் திசையில் வருவதை அவர்கள் விரும்புவார்களா? நான் அவ்வாறு நினைக்கவில்லை."

போர் மேலும் தீவிரமடைவதைத் தாம் விரும்பவில்லை என்று தெரிவித்த டிரம்ப், ஏவுகணைகளை வழங்குவதற்கு முன் உக்ரைன் அவற்றைப் பயன்படுத்தும் முறையை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த செலன்ஸ்கி, "நாங்கள் டோமஹாக் ஏவுகணைகளை இராணுவத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவோம்; ரஷ்யாவில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். நாங்கள் ஒருபோதும் அவர்களின் பொதுமக்களைத் தாக்கியதில்லை. அதுதான் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். எனவே, நீண்ட தூர ஏவுகணைகள் குறித்துப் பேசும்போது, அது இராணுவ இலக்குகளைப் பற்றி மட்டுமே இருக்கும்," என்று உறுதியளித்தார்.

டோமஹாக் ஏவுகணைகள்

டோமஹாக் ஏவுகணைகள் பொதுவாக கடலில் இருந்து ஏவப்படும் நீண்ட தூர குரூஸ் ஏவுகணைகள் (Long-Range Cruise Missile) ஆகும். இவை சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது, ரஷ்யாவின் ஆழமான இராணுவத் தளங்கள், தளவாட மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்கள் போன்ற தற்போது எட்ட முடியாத இலக்குகளைத் தாக்கும் உக்ரைனின் திறனைப் பெரிதும் அதிகரிக்கும்.

20 அடி நீளமும் 1,510 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணைகள், 1991 ஆம் ஆண்டு நடந்த பாரசீக வளைகுடாப் போரில் (ஆபரேஷன் டெசர்ட் ஸ்டோர்ம்) முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. இதில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிக் படைகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் போன்ற வலுவான இலக்குகளை அழிக்க டோமஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இதன் சராசரி விலை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எரியும் வளைகுடா... ஸ்தம்பிக்கும் எரிசக்தி..! நடுவில் சிக்கித் தவிக்கும் இந்தியா
5,000 அடி ஆழத்தில் அணுசக்தி எரிமலை..! டிரம்பின் தூக்கத்தைக் கெடுக்கும் ஈரானின் ரகசியக் கோட்டை..!