இந்தியா - ஸ்பெயின் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து  பிரதமர் மோடி-அதிபர்– ரஜோய் பேச்சுவார்த்தை….

First Published May 31, 2017, 9:45 PM IST
Highlights
India - Spain 7 contracts signed


இந்தியா - ஸ்பெயின் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து 
பிரதமர் மோடி-அதிபர்– ரஜோய் பேச்சுவார்த்தை….

பிரதமர் மோடி, ஸ்பெயின் அதிபர் மரியனோ முன்னிலையில் இந்தியா, ஸ்பெயின் இடையே சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

6 நாட்கள் பயணம்

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற மோடி, அங்கு அந்நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்க்கலை சந்தித்து பேசினார். இதன் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 12 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அதிபர் மாளிகையில்…

ஜெர்மனி பயணத்தை முடித்த பிரதமர் மோடி, டெகல் விமான நிலையத்தில் இருந்து நேராக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நேற்று முன்தினம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்ரிட் நகரில் அவர் தங்கவிருந்த விடுதிக்கு வெளியே குழுமியிருந்த மக்களை மோடி சந்தித்து பேசினார். இந்நிலையில், தலைநகர் மெட்ரிட்டில் உள்ள மான்குலோயா மாளிகையில் ஸ்பெயின் அதிபர் மரியனோ ராஜோயை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்திய - ஸ்பெயின் இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மோடி அழைப்பு

இதில், உறுப்புகள் மாற்றம், சைபர் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உள்நாட்டு விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்தியா, ஸ்பெயின் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஸ்பெயின் கம்பெனிகள் முதலீடு செய்வது சிறந்த நேரம் இது தான் என்று கூறினார்.

இரு நாடுகளும் பாதுகாப்பிற்கான சவாலை சந்திக்கும் நிலையில், சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாத எதிர்ப்பு போருக்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஜோய்க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னருடன் சந்திப்பு

1998-ம் ஆண்டுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ஸ்பெயின் நாட்டு மன்னர் 6-வது பிலிப்பை மேட்ரிட் நகரில் உள்ள பேலேசியோ டி லா ஜர்ஜுவேலா அரண்மனையில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். அதன்பின் நாளை மற்றும் நாளை மறுதினம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் அவர் அந்நாட்டின் புதிய அதிபர் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 

 

 

 

 

 

tags
click me!