பறக்கும் தட்டுக்கள் விவகாரம்.... ஒருவழியாக மௌனம் கலைத்த அமெரிக்கா.... அந்த ரகசியம் இது தானா?

By Kevin KaarkiFirst Published May 18, 2022, 10:48 AM IST
Highlights

விசாரணையில் தான் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் பற்றிய அரசு நிலைப்பாடு மற்றும் தகவல்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டன.

வான் வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அமெரிக்க பாதுகாப்புத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க புலனாய்வுத் துறை சார்பில் வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் பற்றி நேற்று வெளிப்படையான விசாரணை நடைபெற்றது. 

“2000-க்களில் இருந்தே அடையாளம் தெரியாத அல்லது அதிகாரப்பூர்வமற்ற விமானம் அல்லது பறக்கும் தட்டுக்கள் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சி வளாகங்கள் அல்லது பயிற்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் அல்லது குறிப்பிட்ட வான்வெளியில் தோன்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வானில் தோன்றும் அடையாளம் தெரியாத பொருட்கள் பற்றி இதுவரை எந்த யூகங்களையும் வளர்த்துக் கொள்ளவில்லை, மேலும் அது என்னவாக இருக்கும் என்றும் தெரியவில்லை,” என புலனாய்வுத் துறை துணை இயக்குனர் ஸ்காட் பிரே தெரிவித்தார்.

ஆதாரங்கள்:

2021 ஜூன் மாதத்தில், வான் வெளியில் வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என அமெரிக்க புலனாய்வு பிரிவு அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தது. இத்துடன் ராணுவ விமானிகள் அனுபவித்த பல்வேறு சம்பவங்களுக்கு எங்களிடம் விளக்கம் இல்லை என்றும் அமெரிக்க புலனாய்வு பிரிவு தெரிவித்து இருந்தது.

சில சம்பவங்களில் டிரோன்கள் அல்லது பறவைகள் அமெரிக்க ராணுவத்தின் ரேடார் சிஸ்டம்களில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதர சம்பவங்களுக்கு சீனா அல்லது ரஷ்ய ராணுவ உபகரணங்களின் சோதனைகளாக இருக்கலாம். இது போன்ற பறக்கும் தட்டுக்களால் அமெரிக்காவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்குமா என்பதை அறிந்து கொள்ளவே அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவு ஆர்வம் செலுத்தி வருகிறது.

“அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். இவற்றை அந்த வழியில் தான் அனுக வேண்டும்,” என இந்தியானா மாகாண பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தெரிவித்தார். 

விசாரணை:

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக் குரிய பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்று கிரக வாசிகள் உள்ளனரா என்ற குழப்பங்கள் குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் மாநில, மாகாண பிரதிநிதிகள் கலந்து கொண்ட பொது விசாரணை நேற்று மாலை நடைபெற்றது. இந்த விசாரணையில் தான் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் பற்றிய அரசு நிலைப்பாடு மற்றும் தகவல்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டன.

click me!