
இங்கிலாந்தின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கேம்பிரியன் மலைப்பகுதியில் நடந்த கடுமையான போர்ப்பயிற்சியில் முதலிடம் பிடித்த, இந்திய ராணுவத்தின் கோர்கா ரைபில் 2-வது பட்டாலியன்படைபிரிவினருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டு ராணுவம், வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஆபத்து நிறைந்த கேம்பிரியன் மலைப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கான போர்ப்பயிற்சிப் போட்டியை நடத்தியது. ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டியில், மலையில் ஏற்றம் செய்து அங்கு வீரர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் இலக்குகளை முடித்து மீண்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கீழ் இறங்குவதாகும். இது வீரர்களுக்கு மிக சவாலான காரியமாகும்.
55 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த கேம்பிரியன் மலையில் வீரர்களுக்கு பல்வேறு விதமான இலக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும், அதை 48 மணி நேரத்துக்குள் முடித்து கீழே இறங்க வேண்டும். வீரர்களின் இலக்கை நிறைவேற்றும் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும். ஏதாவது ஒரு பொருளை மறந்து வைத்து விட்டால் அதற்கு திரும்ப எடுத்து வருவதோடு, அதற்கு புள்ளிகளும் குறைக்கப்படும். கரடுமுரடான மலைப்பகுதிகளும், பாம்புகள் உள்ளிட்ட கொடிய விஷப்பிராணிகள் இருக்கும் இப்பகுதியில் ஒருமுறை சென்று திரும்புவது மிகவும் சவாலானதாகும்.
இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் கோர்கா ரைபில் படையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து 8 வீரர்களுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
இது குறித்து இங்கிலாந்து ராணுவம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “ இந்திய ராணுவத்தின் கோர்கா ரைபில் 2-வது பட்டாலியன் படையினருக்கு வாழ்த்துக்கள். கேம்பிரியன் பயிறச்சியில் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கம் வென்றது மிகவும் பாராட்டுக்குரியது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.