இந்திய ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி… பிரதமர் மோடி பரபரப்பு கருத்து!!

By Narendran SFirst Published Jun 26, 2022, 10:44 PM IST
Highlights

இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி என்று ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று புறப்பட்டு இன்று ஜெர்மனி சென்றடைந்தார். இந்த நிலையில் அவர், முனிச் பகுதியில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம்.

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத் தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவசர நிலை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியுள்ளது. அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கியுள்ளோம். 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் வங்கி நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்கள் 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை தற்போது பெற முடியும். கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் பலன் அடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது அதனால்தான் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால், தற்போதுள்ள 4 ஆவது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. டேட்டா நுகர்வில் இந்தியா இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: இந்திய தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது... பிரதமர் மோடி பெருமிதம்!!

click me!