அமெரிக்க அதிபராக இருந்தபோது பெற்ற 117 பரிசுகளை மூடி மறைத்த டிரம்ப்!

By SG BalanFirst Published Mar 21, 2023, 9:08 PM IST
Highlights

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தபோது பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பதவி வகித்த காலத்தில், இந்தியா அளித்த 17 பரிசுகள் உள்பட 117 பரிசுப் பொருட்களை வெளியிடாமல் மறைத்துள்ளார் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை குழுவின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது அவரும் அவரது குடும்பத்திரும் சுமார் 2,91,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2.40 கோடி) மதிப்புடைய பரிசுகளைப் பெற்று அவற்றைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்று கூறுகிறது.

இதில் இந்தியாவில் இருந்து அவர் பெற்ற பரிசுகளின் மதிப்பு 47 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38.78 லட்சம்). இந்திய அளித்த மொத்தம் 17 பரிசுகளில் 11 பரிசுகள் டிரம்ப்க்கும், ஒன்று அவருக்கும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கும் சேர்த்து வழங்கப்பட்டது. மெலனியாவுக்கு தனியாக மற்றொரு பரிசும் வழங்கப்பட்டது. டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப்க்கு 3 பரிசுகளும், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னருக்கு ஒரு பரிசும் அளிக்கப்பட்டன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் டிரம்ப்க்கு கருப்பு பளிங்கு மேசை மற்றும் கஃப்லிங்க் ஆகியவற்றையும், மெலனியா டிரம்பிற்கு ஒரு வளையலையும், இவான்கா டிரம்பிற்கு ஒரு பிரேஸ்லெட்டையும் பரிசளித்தார். 2019ஆம் ஆண்டு இவான்கா டிரம்ப் பட்டு ஓவியம் ஒன்றை பிரதமர் மோடியின் பரிசாகப் பெற்றார்.

கால் முறிந்தும் ஆம்புலென்சில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் ஆகியோர் மற்ற பரிசுகளை டிரம்ப் குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளனர். பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய தூதரகமும் ட்ரம்ப் குடும்பத்துக்கு பரிசு வழங்கியது.

சவூதி அரேபியாவிலிருந்து 45,000 டாலர்கள் (ரூ. 37.12 லட்சம்) மதிப்புள்ள 16 பரிசுகளையும், சீனாவில் இருந்து 3,400 டாலர் (ரூ. 2.80 லட்சம்) மதிப்புள்ள 5 பரிசுகளையும் டிரம்ப் வெளிப்படுத்தாமல் மூடி மறைத்துள்ளார் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குழு குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் பரிசுகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் சட்டம் அதிபர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வெளிநாட்டு அரசாங்கங்களின் பரிசுகளைப் பெறுவதை ஒழுங்குபடுத்துகிறது. அதன்படி அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவுக்கு அதிகமாக பரிசுகளை வைத்திருப்பதைத் தடுக்கிறது. இந்தச் சட்டத்தின்படி தற்போது 415 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34,254) மதிப்பிலான பரிசுகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையைவிட அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகள் அனைத்தும் அமெரிக்க அரசாங்கத்தின் சொத்தாக மாறும்.

IMF Sri Lanka Bailout: இலங்கைக்கு 3 பில்லியன் கடன்! IMF ஒப்புதல் அளித்ததை கொண்டாடி மகிழும் பொதுமக்கள்

click me!