சில வாரங்களில் இந்தியாவை நாசம் செய்யப்போகும் கொரோனா..!! 9 மாநிலங்களுக்கு பேராபத்து எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 18, 2020, 1:33 PM IST
Highlights

மத்திய பிரதேசம் மற்றும்  பீகாரில்  தொற்றும் பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது எனவும். இவைகளைத் தொடர்ந்து தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் உ.பி. ஆகியவையும் கவலைக்குரிய பகுதிகளாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்களில் 627 மாவட்டங்களில் கொரோனா தீவிரமாக உள்ளது எனவும், இன்னும் சில வாரங்களில் நாட்டில் மேலும் 9 மாநிலங்களில் தொற்று மோசமடையக்கூடும் எனவும் லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை எச்சரித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  10 லட்சத்து 40 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 26 ஆயிரத்து 296 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில்  6 லட்சத்து 54 ஆயிரத்து 130 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் போதிய அளவிற்கு பலன் இல்லை. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவல் தொடர்பாக பல்வேறு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி வருகின்றன. 

அந்தவகையில் இந்தியாவில் வைரஸ் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் அதன் தாக்கம்  வீரியமாக இருக்கிறது என்பது குறித்தும் லான்செட் என்ற மருத்துவ இதழில் ஆய்வு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும், இந்தியா 98% அளவுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியாவில்தான் நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் உள்ள 640 மாவட்டங்களில் 627 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய ஒன்பது மாநிலங்கள் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மிகக் குறைவாகவே நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாகவும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. மேலும் சமூக-பொருளாதார, மக்கள்தொகை, வீட்டுவசதி-சுகாதாரம், தொற்றுநோயியல் மற்றும் சுகாதார அமைப்பு போன்ற அம்சங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில்,மேற்கண்ட  9 மாநிலங்களில் நோய்பரவலை தடுக்க போதிய கவனம் செலுத்தாவிட்டால்  நிலைமை மோசமடையக்கூடும் என்றும் அந்த கட்டுரை எச்சரித்துள்ளது. 

மத்திய பிரதேசம் மற்றும்  பீகாரில்  தொற்று பரவும் ஆபத்து அதிகமாக உள்ளது எனவும். இவைகளைத் தொடர்ந்து தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் உ.பி. ஆகியவையும் கவலைக்குரிய பகுதிகளாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த கட்டுரை வலியுறுத்தியுள்ளது. இவைகளுடன் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் தொற்று நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அல்லது தீவிர கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் போன்றதிட்டங்கள் அவசியம் என அந்த கட்டுரை எச்சரித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் குருங்குமே மாவட்டம் மிகக் குறைவான அச்சுறுத்தல் கொண்ட பகுதிகளாக உள்ளது.  இதைத் தொடர்ந்து ஹரியானாவில் பஞ்ச்குலா மாவட்டத்திலும் தொற்று அபாயம் குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கான அதிக ஆபத்து மத்தியப்பிரதேசத்தில் உள்ள சத்னாவிலும், பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்திலும் அதிகம் உள்ளது என அந்த கட்டுரை எச்சரித்துள்ளது.  
 

click me!