1 லட்சம் மக்கள் பலி..! கொரோனாவின் கோர தாண்டவத்தால் நிலை குலைந்தது உலகம்..!

By Manikandan S R SFirst Published Apr 11, 2020, 7:21 AM IST
Highlights

உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 1 லட்சத்தை தொட்டுள்ளது. இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் 1,02,607 மக்கள் உயிரழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் 4 மாதங்களாக அந்நாட்டை ஆட்டிப் படைத்தது. அங்கு 3,300 மக்கள் பலியாகி 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளை கொரோனா வைரஸ் தனது கோர பிடியில் தற்போது வைத்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. 

உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 1 லட்சத்தை தொட்டுள்ளது. இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் 1,02,607 மக்கள் உயிரழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 16,94,954 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3,76,102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 12 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 49 ஆயிரத்து 300 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலை நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

click me!