"இந்தியாவே இணங்கிப் போ", "அமெரிக்கா முட்டாள் " ... ஆணவத்தில் அழியும் சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published May 22, 2020, 10:14 AM IST
Highlights

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய பதற்றங்களையும் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா  கவனித்து வருகிறது,  என்றார் . 

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை குறித்து அமெரிக்க தூதரின் கருத்து முட்டாள்தனமானது என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் பதற்றம் நீடித்து வருவது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார் .  இந்தியா-சீனா இடையே அமைந்துள்ள சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு  விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே  நீண்ட நாட்களாக  பிரச்சனை இருந்து வருகிறது . இது தொடர்பாக இரு நாடுகளும் பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் எல்லைக்கோட்டை வரையறுப்பதில் இன்னும்  முடிவு எட்டப்படவில்லை . இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்கோங் த்சோ  என்ற ஏரிப் பகுதியில் சமீபத்தில்  இருநாட்டு படை வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

சுமார் 134 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த ஏரியின் வடக்கு கரை பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது . அதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன . இந்நிலையில்  கடந்த புதன்கிழமை ( மே- 5 ஆம் தேதி )  அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும்  ரோந்து பணியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலையிட்டு  நடத்திய பேச்சு வார்த்தையில் அங்கு பதற்றம்  தணிந்தது . இதேபோல்  மற்றொரு பிரச்சனையில் மே-9 அன்று சிக்கிம் எல்லையில் உள்ள நாகு -லா -பாஸ் அருகே கிட்டத்தட்ட 150 இந்திய -சீன இராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர் , இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் காயமடைந்தனர் இது இந்திய சீன இடையே அசாதாரன சூழலை ஏற்படுத்தியது.  

இந்த சம்பவங்களையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை "இந்திய -சீன எல்லையான அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி சில பாதுகாப்பு  வசதிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியதாக,  அதாவது  குடில்களை அமைத்ததாகவும் , கடந்த மே மாதம் தொடக்கத்திலிருந்து இந்திய ராணுவம் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி சீனா அந்ந பகுதயில் தன் ராணுவத்தை குவித்து வருகிறது  இந்தியாவும் பதிலுக்கும் ராணுவத்தை குவித்து சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உயர் தூதர் ஆலிஸ் வெல்ஸ் , இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய பதற்றங்களையும் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா  கவனித்து வருகிறது,  என்றார் . 

சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்போக்கு வெறும் வார்த்தை அளவிலானது அல்ல என்பதையே இந்தியாவுடனான அதன்  நடவடிக்கைகள் காட்டுகிறது.  தென்சீனக்கடல் பகுதியாக இருந்தாலும் இந்தியாவுடனான எல்லை விவகாரமாக  இருந்தாலும் அதன் அனுகுமுறை ஒன்றுதான் என அவர் குற்றஞ்சாட்டினார்.  சீனாவின் இத்தகைய போக்கு அதிகரித்துவரும் வல்லமையை அந்நாடு எப்படி பயன்படுத்த முயற்சி செய்யும் ! என்பது குறித்த தீவிரமான கேள்விகளை எடுப்பதாகவும் அவர் கூறினார் .  இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள   சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன்,  இந்திய-சீன எல்லை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு உறுதியாகவும்  தெளிவாகவும் உள்ளது, ஆனால்  இதில் அமெரிக்க தூதரின்  கருத்து மிகவும் முட்டாள்தனமானது,  சீனாவின் எல்லை பாதுகப்பு படைகள் சீனாவின் எல்லையையும் , இறையாண்மையையும் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளனர்.  மேலும் இந்திய தரப்பின் குறுக்கு வழி மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளை கையாள்வதிலும்  சீனா உறுதியாக உள்ளது . 

எங்கள் படைகள் எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன,  எங்களுடன் இணைந்து செயல்படவும் எங்கள் தலைமையின் முக்கியமான ஒருமித்த கருத்துக்கு இணங்கவும் ,  செய்யப்பட்டுள்ள  உடன்படிக்கைக்கு இணங்கவும் மேலும் நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலை பட்ச நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கவும் இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என அவர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும் எல்லை பிராந்தியத்தில்  அமைதியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும்  அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடு இன்றி இரு தரப்பினருக்கும் இடையே ஆலோசனைகள் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் உள்ளது என ஜாவோ கூறியுள்ளார். 
 

click me!