ஒரேயடியாக ஐந்துவகை தடுப்பூசிகளுடன் விஸ்வரூபம் எடுத்த சீனா..!! அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிரட்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2020, 12:53 PM IST
Highlights

சீனாவில் இன்னும் சில மாதங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாராக இருக்கும் என, சீன தொற்று நோயியல் நிபுணர் டாக்டர்  ஜாங் நன்ஷான்   தெரிவித்துள்ளார்.

சீனாவில் இன்னும் சில மாதங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாராக இருக்கும் என, சீன தொற்று நோயியல் நிபுணர் டாக்டர்  ஜாங் நன்ஷான்   தெரிவித்துள்ளார். உலகிலேயே முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்திற்குள் தயாராக கூடுமென அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதுவரை 72 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து  767ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் சுமார் 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அது கட்டுக்கடங்காமல் மனிதர்களை கொத்துக்கொத்தாக தாக்கி வருகிறது. ஒரு பிரத்தியேக தடுப்பூசி வரும்வரை இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் தடுப்பூசி கண்டுபிடிப்பின் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். 

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்,  சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் முக்கிய உறுப்பினரும், வைரஸ் தொற்று நோயியல் நிபுணரும் மற்றும் சிறந்த சுவாச நோய் நிபுணருமான டாக்டர்  ஜாங் நன்ஷான் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் என கூறியுள்ளார்.  மேலும் இதுவரை கொரோனாவுக்கு பிரத்யேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை, அதேபோல் ஒரு தடுப்பூசி இல்லாமல் தொற்று நோயை சமாளிக்க உதவும்  இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியும் சமூகத்தில் உருவாகவில்லை. SARS-CoV-2 உள்ளிட்ட தொற்று நோய்களில் போதிய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை, சமூகத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை நோயால் பாதிக்கப்பட்ட பின்னரே இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் ஆனால் தற்போது மிக சொற்பமான அளவிலேயே உள்ளது. எனவே ஒரு தடுப்பூசியால் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும், சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் மனிதச் பரிசோதனையில் இருந்து வருகிறது.

 

சீன நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி தயாரிப்பிற்கு மொத்தம் ஐந்து வகையான  தொழில்நுட்ப பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர் எனக் கூறிய டாக்டர்  ஜாங் நன்ஷான், வெள்ளை காகித (அ) செயல்படாத தடுப்பூசிகள், இனக்கலப்பு புரதம் தடுப்பூசிகள், வலுக்குறைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தடுப்பூசிகள், ஆடனோவைரஸான திசையன் தடுப்பூசிகள் மற்றும் நியூக்ளிக் அமிலம் தடுப்பூசிகள் என அவற்றை சுட்டிகாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 120க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 4 நிலவரப்படி 10 தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே மனித பரிசோதனையில் உள்ளன. அமெரிக்காவில் நான்கும், சீனாவில் 5 மற்றும் இங்கிலாந்தில் 1 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்டர்  ஜாங் நன்ஷானின் தகவல் முதல் தடுப்பூசி சீனாவிலிருந்தே உருவாகும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதே நேரத்தில் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் அந்தோணி பௌசி இதேபோன்ற தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மருத்துவ பரிசோதனைகள் முடிவதற்கு முன்பே இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவிடம் கோவிட்-19 தடுப்பூசி தயாராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா சீனா இடையே  யார் முதலில் தடுப்பூசி தயாரிப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவிவருகிறது. 
 

click me!