
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரை (Bondi Beach) அருகே யூதர்களின் முக்கியப் பண்டிகையான ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டம் நடைபெற்றபோது நடந்த கொடூரத் துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை ஹனுக்கா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான யூதர்கள் போண்டி கடற்கரை அருகே கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தை நோக்கி திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்தத் திடீர் தாக்குதலைக் கண்ட மக்கள் உயிர் பயத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். ஆரம்பத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரமான சம்பவத்துக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகின் பல நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த அலி அகமது (வயது 43) என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரைக் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்க முயன்றார். அப்போது, மற்றொரு நபர் சுட்டதில் அலி அகமது படுகாயம் அடைந்தார். அவரது இந்தத் துணிச்சலான செயல் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
சம்பவத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு வாலிபரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாஜித் அக்ரம் (வயது 50) ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சாஜித் அக்ரம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேறி அங்கேயே திருமணம் செய்துகொண்டுள்ளார். மொத்தமாக 2 அல்லது 3 முறை மட்டுமே அவர் இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளார்.
சாஜித் அக்ரமும், அவரது 24 வயதான மகன் நவீத் அக்ரமும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்தில் சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இந்தியாவுக்கோ தெலுங்கானாவில் உள்ளவர்களுக்கோ நேரடித் தொடர்பு இல்லை என்றும் தெலுங்கானா போலீசார் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சாஜித் அக்ரம் பயங்கரவாத செயல்களால் ஈர்க்கப்பட்டு இக்கொடூரத்தைச் செய்ததாகவும் கூறியுள்ளது.
சிட்னியில் உள்ள மருத்துவமனைகளில் படுகாயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.